அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

May 30, 2014

மது படிப்படியாக தடை செய்யப்பட்டதா? (நாசிக், மன்சூக் - திருக்குர்ஆனில் இல்லை.)


மாற்றிய வசனம் 5:90,91; மாற்றப்பட்ட வசனம் 2:219;4:43) 

திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 116 இல் போதையாக இருக்கும் போது என்னும் தலைப்ப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்:

முதலில் அரபு மக்களுக்கு குடி தடுக்கப்படாமல் இருந்தது. (திருக்குர்ஆன் : 16:67) பின்னர் படிப்படியாக இது குறித்து தடைகள் இறங்கின. 

போதையாக இருக்கும் போது தொழக்கூடாது என்ற கட்டளை வந்தது. (திருக்குர்ஆன்:4:43) பிறகு குடிக்காமல் இருப்பதே நல்லது என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது (திருக்குர்ஆன்:2:219) அதன் பிறகு அறவே போதை கூடாது என்று முழுமையாகத் தடை செய்யப்பட்டது. (திருக்குர்ஆன்: 5:90-91) என்று எழுதியுள்ளார். 

நம் விளக்கம்: 

திருக்குர்ஆன் 5:90-91 வசனம், குடிக்கவே கூடாது என்ற சட்டத்தின் மூலம் அதற்கு முன்னர் வந்த குடி பற்றிய பிற சட்டங்களை ரத்து செய்து விட்டது என்றால் இதனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, நபித் தோழர்கள் அனைவரும் கூறும் சான்று ஒன்றை உலகில் யாராவது எடுத்துக் காட்ட முடியுமா? முடியாது. 

குடிப்பழக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முழுமையாக தடை செய்யப்பட்டது என்று ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களே கூறாதிருக்கும் போது அவர்களுக்குத் தெரியாத ஒன்று இவர்களுக்குத் தெரிந்து விட்டதா? இது பற்றிய சட்டம் இஸ்லாம் புதிதாக அறிமுகம் ஆகும் ஒரு நாட்டில் இப்படித்தான் படிப்படியாக குறைக்கப்பட வேண்டுமா? அல்லது ஒரேயடியாக 5:90-91 வது வசனத்தின் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமா? 5:90-91 வசனமே நடைமுறைக்கு வரும் என்றால், அரபு நாட்டுக்கும் பிற நாட்டுக்கும் பாகுபாடு காட்டியது ஆகாதா? 

அரபு மக்கள் குடியில் மட்டுமா அப்படி இருந்தார்கள். விபச்சாரம், வட்டி போன்ற இதர தீய செயல்களிலும் எப்போதும் அப்படித்தானே இருந்தார்கள். அந்தத் தீய பழக்கங்களும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு ஒரு கட்டத்தில் முழுமையாக நீக்கப்பட்டதா? அதற்கு பி.ஜே கைவசம் ஆதாரங்கள் உண்டா? என்று பல கேள்விகள் எழும்!

பி.ஜே மேலே காட்டிய வசனங்கள் எல்லாம் அவர் கூறுவது போல் படிப்படியாக குடியைக் குறைக்கக் கூறியது அன்று. திருக்குர்ஆன் 16:68 - ஐக் காண்போம். திருக்குர்ஆன் 16:66-70வசனங்கள். 

1. மழை நீர் 2. பால் 3. கனிரசம் - உணவு . 4.தேன் பற்றிக் கூறப்பட்டுள்ளது. எனவே இது வெறும் மது பற்றிய போதனை இல்லை என்று தெளிவாகிறது. அதிலும். 

பேரீச்சை மற்றும் திராட்சைக் கனிகளிலிருந்து மதுவையும் அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள். விளங்கும் சமுதாயத்துக்கு இதில் சான்று உள்ளது என்று அவ்வசனம் கூறுகிறது. மதுப்பழக்கம் என்றால் மதுவை மட்டும் கூறியிருக்க வேண்டும். அத்துடன் அழகிய உணவையும் தயாரிக்கிறீர்கள் என்று கூறப்பட்டுள்ளதால் குடிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று விளங்குகிறது. 

மழை நீரைப்பற்றிக் கூறும் போது, செவியேற்கும் மக்களுக்கு இதில் அடையாளம் உள்ளது என்றும், பாலைப் பற்றி கூறும் போது இதில் படிப்பினை உள்ளது என்றும், கனிரசத்தையும் அதன் உணவைப்பற்றியும் கூறும் போது செயலாற்றும் மக்களுக்கு இதில் அடையாளம் உள்ளது என்றும், தேனைப்பற்றிக் கூறும் போது செயலாற்றுபவர்களுக்கு இதில் ஓர் அடையாளம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

எனவே, இது மதுவுடன் சம்பந்தமில்லாதது என்று விளங்குகிறது. திருக்குர்ஆனில் சொர்க்கத்தில் நீராரும், பாலாரும், மது ஆறும், தேனாறும் ஓடுவதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே மறுமையில் சொர்க்கத்தில் ஓடும் அந்தந்த ஆறுகளிலிருந்து நீரையும், பாலையும், மதுவையும், தேனையும் மறுமையில் அருந்துபவர்கள் இவ்வுலகில் ஹலாலான நீரையும், பாலையும், பழரசத்தையும், உணவையும், தேனையும் அருந்தியிருக்க வேண்டும் என்பதால் 16:67 இல் கூறப்பட்டது ஹலாலானது என்று விளங்குகிறது. ஹலாலான கனிரசம் என்றும், மது இல்லை என்றும் விளங்குகிறது. 

திருக்குர்ஆன் 16:67 வது வசனத்தின் அடிக்குறிப்பில், 

இங்கு ஸகர் (மது) என்று குறிப்பிட்டிருப்பது போதை தரும் குடிப்பையல்ல; இது நபீது என்ற பானத்தையாகும். மது தயாரிப்பதற்காக பழச்சாற்றைப் புளிக்க வைக்கிறார்கள். ஆனால் நபீது தயாரிக்கும் விதம் வேறு. பழரசங்களைக் கொதிக்க வைத்து, அது மூன்றிலொரு பாகமாக வற்றியதும் நபீது கிடைக்கிறது. இது அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பெரியோர்கள் இதை அருந்தி இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. 

ஸக்ரு என்பது பசி தீர்க்கும் உணவு என்று பொருள்படும் என அபூ உபைதா சொல்லியிருப்பதாக தப்ஸீர் காஸினில் குறிப்பிடப்பட்டிருக்கிறது (காஸின்: குர்துபீ, நஸயீ; மஆரிப்) 

முஸ்லிம் மன்னர்கள், அப்பாஸிய கலீபாக்கள் குடிக்கிறார்கள் என்று மேலை நாட்டினர் சித்தரித்துக் காட்டுவதெல்லாம் நபீது அருந்திக் கொண்டிருந்ததைத்தான். 

நபீது போதை தருவதல்ல; அதை அருந்துதல் ஹலால் என்று இமாமுல் அஹ்லமும், ஹஸ்ரத் அபூயூஸுபும் அறிவித்திருக்கிறார்கள். (நஸபீ - மதாரிக் - பக்கம். 161 மூன்றாம் பாகம்) ஆதாரம் : அப்துல் வஹ்ஹாப் குர்ஆன் தர்ஜுமா 16:67 வது வசனத்தின் அடிக்குறிப்பு எண் 153. 

பேரீச்சை மற்றும் திராட்சைப் பழங்களிலிருந்து பிழியப்படும் ரசங்களை ஆகுமாக்கப்பட்ட (ஹலாலான) வகையில் பருகுவதை இத்திருவசனங்கள் குறிப்பதாக ஹஸ்ரத் இப்னு ஜுபைர், நகஈ, சஅபீ, அபூதவ்ர் ஆகியோர் கூறுகின்றனர். (தப்ஸீர் ஜவாஹிருல் குர்ஆன் 61:7 வசனத்தில் விரிவுரை) 

திராட்சை என்பதற்கு லத்தீன் மொழியில் என்ன சொல்லோ அதன் சாயலில் வந்த வார்த்தைதான் வைன். உண்மையில் இது பழரசம். அதை மெதுவாக மாற்றியது நம் தவறு. கி.மு. 5000-6000 ஆண்டுகளிலேயே மக்கள் வைன் பருகியிருக்கிரார்கள் என்கிறது விக்கிபீடியா இணையதளம். ஜார்ஜியாவில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான வைன் கிடைத்திருக்கிறது. வாரம் இரு கிளாஸ் வைன் குடித்தால் ஆஸ்துமா வராது என்கிறது டென்மார்க் ஆராய்ச்சி நிறுவனம். 

என்ன சிக்கல் என்றால் இன்று வைனுடன் ஆல்கஹாலை அதிகப்படியாக கலந்து அதையும் மதுபான பட்டியலில் சேர்த்துவிட்டோம். இதனால் வைன் தரும் மருத்துவ பலன்களை பெருமளவு இழந்துவிட்டோம். புற்று நோய் வராமல் தப்பாது, இதய நோயை விரட்டுவது, வயதாகும் போது ஏற்படும் மூளை மந்தத்தை தருப்பது....என பல வேலைகளை வைன் செய்கிறது. (தினகரன் 26.05.2013, பக்கம் 11) 

இரண்டாவதாக, 4:44 இல், நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் கூறுவதை புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு மயக்க நிலையில் இருக்கும் போது தொழுகையை நெருங்காதீர்கள் என்று வருகிறது. 

இவ்வசனத்தில் வரும் சுகாரா எனும் சொல்லுக்கு மயக்க நிலை என்று பொருளாகும். இது குடிபோதையை மட்டும் குறிக்காமல், கடுங்கோபத்திற்கு உள்ளானவன், காதல் போதைக்கு உள்ளானவன், அச்சத்தால் தாக்குண்டவன், தூக்க போதைக்கு ஆளானவன் என்றெல்லாம் பொருள் உண்டு. எனவே இத்தகைய நிலைகளில் தொழுகையை நெருங்காதீர்கள் என்று பொதுவாக கூறும் வசனமாகும். குடியை மட்டும் கூறி தடை செய்யும் வசனம் அன்று. 

மூன்றாவதாக 2:219 வசனத்தில், குடிக்காமல் இருப்பதே நல்லது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பி.ஜே கூறுகிறார். இதுவும் தவறாகும். 2:218, 2:219 ஆகிய வசனங்களில் அவர்கள் புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் வினவுகின்றனர் (2:219) என்றும். 

நம்பிக்கை கொனவர்களும், (தம் வீட்டைத்) துறந்து சென்று அல்லாஹ்வின் வழியில் அறப்போர் புரிபவர்களும் ஆகிய இவர்களே (2:219) என்றும் போரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. 

2:220 வசனத்தில் அவர்கள் உம்மிடம் மதுவைப் பற்றியும் சூதாட்டத்தைப் பற்றியும் வினவுகின்றனர் என்று வருகிறது. 

எனவே, இது போருடன் சம்பந்தப்பட்ட கேள்வி என்று விளங்குகிறது. அக்கால மக்களிடம் போரில் மதுவும், உணவும் வழங்குவதற்கு பலர் முன்வருவார்கள். போரிடும் வீரர்களுக்கு மதுவையும், உணவையும் யார் வழங்குவது என்பாது பற்றி சீட்டுக் குலுக்கிப் போட்டு பார்த்து முடிவு எடுப்பது வழக்கம். இதுவே இங்கு சூதாட்டம் என்று கூறப்படுகிறது. இந்த சூதாட்டத்தில் யார் பெயர் வருகிறதோ அவர்கள் போர் வீரர்களுக்கு மதுவும் உணவும் வழங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்படும். 

இவ்வாறு செய்வதில் கொஞ்சம் நன்மையையும் மிகுதியாக தீமையும் உண்டு என்று இவ்வசனம் கூறுகிறது. எனவே இவ்வசனம் குடியைப் படிப்படியாக குறைக்கும் வசனம் ஆகாது. 

முழுமையாகத் தடை செய்யப்பட்ட வசனம் 5:91, 5:92 என்பதே சரி. 

நம்பிக்கை கொண்டவர்களே! போதைப் பொருள்கள், சூதாட்டம், சிலைகள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியன அருவருக்கத்தக்கதும் சைத்தனின் செயலும் ஆகும். எனவே நீங்கள் வெற்றி பெரும் பருத்து அவற்றிலிருந்து (முற்றிலும்) விலகிக் கொள்ளுங்கள். இதில் நம்பிக்கை கொண்டவர்களே என்று அழைக்கப்பட்டுள்ளது. போதை தரும் மதுவும் சூதாட்டம், சிலை, குறிபார்க்கும் அம்புகள் என்று வருகிறது. முற்றிலும் விலகுங்கள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே மதுவை தடை செய்த சட்டம் 5:90-91 என்பதே சரி இவ்வசனம் எதனையும் ரத்து செய்யவில்லை.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.