அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Aug 19, 2014

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் ஜிஹாதை தடை செய்துள்ளார்களா?


(இலண்டனில் நடைபெற்ற மஜ்லிசே – இர்ஷாத் என்னும் கேள்வி பதில் கூட்டத்தில் ஹஸ்ரத் கலீபதுல் மஸீஹ் மாற்றுமதத்தவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். அந்த கேள்வி பதிலிருந்து இது எடுக்கப்பட்டுள்ளது.) 

கேள்வி: ஹஸ்ரத் மிர்ஸா குலாம்(அலை) அவர்கள் ஜிஹாதை தடை செய்துள்ளார்களா? 

இல்லை ஒரு போதும் இல்லை. ஜிஹாதின் பெயரால் போர் மூட்டுவதைத்தான் அவர்கள் தடைசெய்துள்ளார்கள். ஜிஹாதும். போரும் இரண்டு தனித்தனி விஷயங்களாகும். ஜிஹாதிலும் சில சந்தர்ப்பங்களின் போர் இடம் பெறுகின்றது. ஆனால் ஒவ்வொரு ஜிஹாதும் ஒரு போரல்ல. ஜிஹாதிற்கு திருக்குர்ஆன் தரும் விளக்கத்திற்கு மாறாக நீங்கள் என்ன விளக்கமளித்தாலும் அது இஸ்லாம் கூறும் விளக்கமாக இருக்காது. ஜிஹாதைப் பற்றித் திருக்குர்ஆனில் வரும் முதலாவது கட்டளைப்படித்தாலே அது பற்றிய உண்மையைப் புரிந்து கொள்ளமுடியும். ‘ஸுரத்துல் ஹஜ்’ஜில் தான் முதன் முதலில் ஜிஹாது செய்வதற்க்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அது கூறுவதாவது, 

“அநியாயமான விதத்தில், போர் செய்யக் கட்டாயப்படுத்தப் படுபவர்களுக்குப் போர் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்யும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு உண்டு அவர்கள் தங்களுடைய இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறியதற்காக மட்டும், வேறு காரணமுமின்றி அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அல்லாஹ் இவர்களில் சிலரைக் கொண்டு சிலரைத் தடுக்கவில்லை என்றால், கிறிஸ்தவர்களின் ஆலயங்களும், யூதர்களின் வணக்க இடங்களும், அல்லாஹ்வின் திருநாமம் அதிகமாக உச்சரிக்கப்படும் (முஸ்லிம்களின்) பள்ளிவாசல்களும் இடித்து நாசம் செய்யப்பட்டிருக்கும். ( திருக்குர்ஆன் 22:40,41) 

அதாவது ஏற்கனவே வாளெடுத்து முஸ்லிம்களைத் தாக்கிப் போரிடுபவர்களுக்கெதிராக போரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து இஸ்லாத்தின் விரோதிகள் முஸ்லிம்களிடம் போர் செய்ய வந்தால் மட்டுமே ஜிஹாது செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறதென்று தெரிகிறது. ஆக்கிரமிப்பிற்கும், அக்கிரமத்திற்கும் அநியாயத்திற்கும், ஆளாக்கப்பட்டிருக்கவேண்டும் மென்றும் தெரிகிறது. அது மட்டுமன்று அக்கிரமத்திற்கும், அநியாயத்திற்கும் ஆளானவர்களுக்கு உதவி செய்ய தான் வல்லமையுள்ளவன் என்று அதாவது போர் செய்வதற்கான அனுமதி அளிக்கப்பட்டவர்களைதான் வெற்றி பெறச் செய்வேன் என்று அல்லாஹ் கூறுகிறான். 

இதிலிருந்து இஸ்லாத்தின் பெயரால் மார்க்கத்தின் பெயரால் – முதலில் வாளெடுத்துப் போர் செய்வதற்கு எங்கேயும் அனுமதி அளிக்கப்படவில்லையென்று புலனாகிறது. 

போர் செய்வதற்கு அல்லாஹ் சில நிபந்தனைகளை விதிக்கிறான். 

விரோதிகள் முதலில் ஆயுதமேந்திப் போர் செய்ய வேண்டும். 

யுத்தம் செய்யப்படுபவர்கள் எந்த குற்றமும் செய்யாதவர்களாகவும், அநியாயத்திற்காளானவர்களாகவும் இருக்க வேண்டும். 

இங்கு சிந்திக்கத்தக்க விஷயம் என்னவென்றால் பெரும்பான்மையினரும், சக்தி மிக்கவரும், அகம்பாவக்காரர்களும், அக்கிரமக்காரர்களுமான ஒரு பெருங்கூட்டதிற்கெதிராகப் போர் செய்வதற்கு, மிகவும் பலவீனமான, அக்கிரமங்களுக்குகாளான சிறுபான்மையினரான ஒரு ஜமாத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது, அந்தப் பலவீனமான சிறுபான்மையினரின் தற்கொலைக் கொப்பானதாகி விடுமே! ஆனால் இந்தச் சந்தேகத்திற்கும் அல்லாஹ்வே பதிலளிக்கிறான். சக்திமிக்கவனும், எல்லா வல்லமையுள்ளனவனுமான அல்லாஹ் அந்தப் பலவீனமான சிறுபான்மையினருக்கு உதவி செய்து அவர்களை வெற்றி பெறச் செய்வான். அல்லாஹ்வின் இந்த வாக்குறுதிக்கிணங்க எம்பெருமானார் (ஸல்) அவர்கள் தம் வாழ்வில் ஒருபோரும் தோல்விக் கண்டதே இல்லை. சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பெரும்பான்மையினரான நிராகரிப்பவர்களை வெற்றி கொண்ட வரலாற்றைத்தான் நாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் காண்கிறோம். 

தொடர்ந்து அல்லாஹ் கூறுகிறான். 

“எந்தக் காராணமும் இல்லாமல் அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்கள் செய்த மிகப் பெரிய குற்றம் எங்களுடைய இரட்சகனான இறைவன் அல்லாஹ் என்று கூறியதாகும்.” 

அடுத்து அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். 

“இறைவன் தற்காபிற்கான அனுமதி வழங்கவில்லை என்றால் யூதர்கள் கிறிஸ்தவர்களின் வணக்க இடங்களும், இறைவன் அதிகமாக நினைக்கப்படும், அவனது பெயர் அதிகமாக உச்சரிக்கப்படும் பள்ளிவாசல்களும் நாசமடைந்திருக்கும்” 

சற்று சிந்தனை செய்துபாருங்கள். இங்கு இஸ்லாமிய தர்மயுத்ததைப் பற்றிய விஷயம் விவரிக்கபடுகிறது. ஆனால் இதல் யூத, கிறிஸ்தவ தேவாலயங்களைப் பாதுகாப்புப் பற்றியும் கூறப்படுகிறது. இங்கேதான் இஸ்லாத்தின் பெருமை விளங்குகிறது. தற்பாதுகாப்பிற்காக ஜிஹாது செய்வதற்கு அனுமதி தந்தவுடன், திருக்குர்ஆன் இறைவனின் பெயரால் முஸ்லிம்களுடையவையோ, அல்லது முஸ்லிம் அல்லாதவர்களுடையவோ வழிபாட்டிடங்களின் பாதுகாப்பைப் பற்றியும் கூறுகின்றது. இஸ்லாம் கூறும் போதனை இதுதான்! ஏதேனும் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்படுகின்றனவென்றால் இந்த போதனையின்படி அவற்றைக் காக்கவேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. இஸ்லாத்தின் இந்த போதனைகளை நீங்கள் உலகத்தின் முன் வைத்துப் பாருங்கள் இஸ்லாத்திற்கெதிராக ஆட்சேபனை செய்வதற்கு இஸ்லாத்தின் விரோதிகளிடம் வேறு என்ன காரணம் இருக்கிறது என்பதை பாருங்கள்? இந்தப் போதனைகளைப் புறக்கணித்துவிட்டு மார்க்க ரீதியாக கொள்கை வேறுபாடு கொண்டவர்களுடன் போர் செய்ய வேண்டும். அவர்களுடைய வீடுகளை இடித்து தரைமட்ட மாக்கவேண்டும்; வீட்டை விட்டும், நாட்டைவிட்டும் அவர்களை வெளியேற்றவேண்டும்; அடிக்க வேண்டும்; கொல்லவேண்டும்; என்ற எண்ணம் இஸ்லாத்தின் போதனைக்கும் கட்டளைக்கும் எதிரானதாகும். ஜிஹாதின் பெயரால் நடத்தப்படும். இத்தகைய அராஜகங்களைத்தான் ஹஸ்ரத் மஸீஹ் மவூத் (அலை) அவர்கள் தடை செய்திருக்கிறார்கள். 

எத்தகைய தருணத்தில் ஜிஹாத் செய்யவேண்டுமென திருக்குர்ஆன் கூறுகிறதோ அத்தகைய தருணத்திலே அது கூறும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜிஹாத் செய்யவேண்டும். இப்படிப்பட்ட ஜிஹாதை இரத்து செய்வதற்கான அதிகாரம் எவருக்குமில்லை. ஆனால் விரோதிகள் உங்கள் மீது மார்க்கத்தின் பெயரால் அநியாயம் செய்யாமலும் உங்களை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றாமலும் இருக்கும்போது, அந்த விரோதிகளுக்கெதிராக யுத்தம் செய்வதற்கான அனுமதியே இல்லை. அவ்வாறு செய்யப்படும் யுத்தத்தை ‘ஹிஹாத்’ என்று கூறக்கூடாது. 

அரசியல் போராட்டங்கள் பல விதத்திலும் இருக்கின்றன. உதாரணமாக ஈரானும், ஈராக்கும் பல வருடங்களாக போர் செய்து வருகின்றன. இது ஜிஹாத் அல்ல, அரசியல் போராகும். 

ஆகவே பகுத்தறிவின் அடிப்படையில் இஸ்லாத்தின் போதனைகளைப் பற்றி சிந்தனை செய்யுங்கள். இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், போதனைகளையும் உன்னிப்பாக கவனிக்கவேண்டும். பின்னர் அரசியல் போர்களையும் தர்ம யுத்தங்களையும் பற்றி ஆராய்ந்து அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாததுவரை இஸ்லாத்திற்கெதிராக செய்யப்படும் ஆட்சேபனைகளுக்கு மறுப்பளிக்க முடியாது. 

இஸ்லாமிய வரலாற்றில் ஆரம்பகால கட்டத்தில் நடைபெற்ற ஜிஹாதுகளில் அதன் நிபந்தனைகள் பூரணமாகக் கடைபிடிக்கப்பட்டன. இதன் காரணமாக எம்பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்தில் நடைபெற்ற எந்த ஒரு ஜிஹாதைப் பற்றியும் எவராலும் ஆட்சேபனை செய்யமுடியாது; பின்னர் உருவாக்கப்பட்ட முஸ்லிம்களின் பௌதீகமான அரசாங்கங்களின் நடை பெற்ற அரசியல் போர்களில் ஜிஹாதிற்கான நிபந்தனைகளை நிறைவேறாத காரணத்தினால் அவை ஜிஹாதுகளாக இருந்ததில்லை. அந்த நிபந்தனைகள் நிறைவேறியவை மட்டுமே ஜிஹாதுகளாக இருந்தன. இதே போன்று அரசியல் போர்களில் கிறிஸ்தவ நாடுகளும் ஈடுபட்டிருந்தன. இன்றும் ஈடுபட்டுவருகின்றன. அதற்காக நீங்கள் கிறிஸ்தவ மதத்தைக் குறை கூறுவீர்களா? 

பாலஸ்தீனத்திலிருந்து வந்த ஒரு சகோதரர் தற்போது இஸ்ரேலில் நடைபெற்றுவரும் யுத்தம் ஜிஹாதுதானே என்று வினவினர். நான் அவருக்கு இவ்வாறு பதிலளித்தேன். இஸ்ரேல் நாட்டில் ஆட்சி புரிவதற்கு யூதர்களுக்கு எந்த விதமான உரிமையும் அதிகாரமும் இல்லை. இது இஸ்லாமிய உலகிற்கு எதிராகச் செய்யப்பட்ட ஒரு சதித்திட்டமாகும். அடையாளங்களாலும், தெளிவுகளாலும் யூதர்களுகெதிராக அணிசேர்ந்து அவர்களை முறியடிப்பதில் அஹ்மதிய்யா ஜமாஅத் எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. ஐ.நா சபையில் பாலஸ்தீனப் பிரச்சனைப் பற்றி ஹஸ்ரத் சௌத்திரி ஸபருல்லாக்கான் ஸாஹிப் செய்த வாதத்தைப் பற்றி உலக முஸ்லிம் நாடுகள் இன்றும் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சனையில் அது போன்ற ஒரு வாதத்தை இது வரை எவரும் செய்ததில்லை. ஆனால் இந்தப் போரை நபி (ஸல்) அவர்கள் செய்த ஜிஹாதுடன் ஒப்பிட்டுப் பார்ப்பீர்கள் என்றால் முதலில் நீங்கள் என்னுடைய கேள்வி ஒன்றுக்கு பதில் தந்தாகவேண்டும். என்ன! அல்லாஹ் தனது வாக்குறுதியை (நவூதுபில்லாஹ்) மீறி விட்டானா? அல்லது பொய் கூறுகிறான் என்று நினைக்கிறீர்களா? நான் உங்களுக்கு ஜிஹாது செய்ய அனுமதி தருகிறேன். நான் உங்களுக்கு உதவி செய்து உங்களை வெற்றி பெற செய்வேன். என்று அல்லாஹ் வாக்குறுதி அளிக்கவில்லையா? ஆனால் நீங்கள் தற்போது செய்துவரும் யுத்தத்தில் உங்களுக்கு ஏன் இறைவன் புறமிருந்து உதவியும், வெற்றியும் கிடைப்பதில்லை? 

ஒரு பக்கம் நான் முஹ்மீன்களுக்கு உதவி புரிந்து கொண்டிருப்பேன் என்று இறைவன் கூறுகிறான். மறுபக்கம் முஸ்லிம்களுக்கு தோல்வியும், விரோதிகளுக்கு வெற்றியும் கிடைக்கிறது எனவே ஆன்மீகக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது இங்கே ஏதோ குறைபாடு இருப்பதை புரிந்து கொள்ளமுடியும். அதனை நீங்கள் திருத்தினால், ‘இந்த நாடு நல்லடியார்களுக்கு சொத்தாகக் கிடைக்கும்’ என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி பூர்த்தியாகிவிடும். எனவே மார்க்கரீதியான உங்களுடைய குறைபாடுகளை போக்கி உண்மையான முஹ்மீன்களாகுங்கள் அப்போது அல்லாஹ்வின் வாக்குறுதி உங்களிடம் பூர்த்தியாகும் (அந்நஸர் )
Read more »

Aug 9, 2014

எல்லா நபிமார்களை விட எல்லா வகையிலும் சிறந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே!


அபூ அப்தில்லாஹ் பக்கம் 28 இல், தூதர்களில் சிலரை சிலரைவிட மேன்மையாக்கி இருக்கிறோம்... என்று தான் அல்லாஹ் நவின்றுள்ளானே அல்லாமல் நபி (ஸல்) அவர்களை மற்ற எல்லா நபிமார்களையும் விட எல்லா விசயங்களிலும் உயத்த்தி இருப்பதாகச் சொல்லவில்லை என்று எழுதி, ஈஸா (அலை) தகப்பனின்றி பிறந்தது, வானிற்கு உயர்த்தப்பட்டது போன்றவை நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை என்றும் எழுதியுள்ளார். 

நம் பதில்: 

இவர்கள் இஸ்லாமிய வட்டத்திற்குள் தான் உள்ளாரா? என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. 
 
இஸ்லாத்தின் அடிப்படைக்கே குழிப்பறிக்கும் இத்தகைய அக்கிரமக்காரர்களுக்கு ஒரு கூட்டம் முஸ்லிம்களிடையே இருப்பது எத்துனை வேதனைக்குரியது!

இவற்றுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் திருக்குரானை ஓதி அதன் வசனங்களைச் சிந்தித்து உணராததேயாகும். அல்லாஹ்வின் அந்த அருள்மறை

அபலா தஹ்கிலூன்

அபலா ததபக்கரூன்

அபலா ததப்பரூன்

என்றெல்லாம் கூறி அதன் வசனங்களை சிந்தித்து அது கூறும் உண்மைகளை உணரவேண்டுமென எடுத்துரைக்கிறது.

1. ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களுக்கும் இமாம் ஆவார். (முஸ்லிம் விளக்க எண். 278) 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; (பைத்துல் முகத்தஸில்) இறைத் தூதர்களில் ஒரு குழுவினர் இருந்தனர்... அப்போது (ஒரு) தொழுகையின் நேரம் வந்து விடவே இறைதூதர்களுக்கு நான் தலைமை தாங்கி தொழுகை நடத்தினேன். 

2) நபிமார்களின் நாயகர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என இப்னு கஸீர் கூறுகிறார். 

பைத்துல் முகத்தஸில் எல்லா நபிமார்களும் கூடினர். அப்பள்ளியில் நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள். இது அவர்கள் அனைத்து நபிமார்களின் தன்னிகரற்ற தலைவர் என்பதைக் காட்டுகிறது என்று கூறுகிறார். (17:1 வசனத்தின் தப்ஸீர் இப்னு கஸீரின் விளக்கம்) 

எல்லா நபிமார்களையும் விட ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலானவர்கள் என்பதையே மிஹ்ராஜ் பயணம் காட்டுகிறது. 

நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து ஒவ்வொரு வானத்தையும் கடந்து 7 வானத்தையும் தாண்டி, சித்ரதுல் முன்தஹா வரை சென்று இறைவனுடன் உரையாடி வந்துள்ளார்கள். 

உலகில் தோன்றிய அனைத்து நபிமார்களும் தத்தமது தகுதிகளுக்கு ஏற்ப 7 வானங்களில்தான் உள்ளனர். ஆனால் நபி (ஸல்) அவர்களோ அனைத்து நபிமார்களின் ஆத்மீக பதவிகளாகிய 7 வானத்தையும் தாண்டி சித்ரதுல் முன்தஹா சென்றுள்ளார்கள். பூமியில் நின்று ஒருவர் வானத்தைப் பார்த்தால் 7 வானங்களிலும் அனைத்து நபிமார்கள் இருப்பதையும் அவர்களையும் தாண்டி இறுதி எல்லையில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் இருப்பதையும் காணலாம். இப்பதவி நுபுவத்தின் இறுதிப் பதவியாகும். 

4) காத்தம் எனும் சொல்லை அடுத்து நபிமார்கள் எனும் பன்மைச் சொல் வந்தால் – நபிமார்களுள் காத்தம் என்று வந்தால் அரபி மொழி வழக்கிர்கேற்ப அதற்கு நபிமார்களுள் மிகச் சிறந்தவர் என்றே பொருளாகும். அல்லாஹ் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே காத்தமுன்னபியீன் – நபிமார்களில் மிகச் சிறந்தவர் எனக் கூறுகிறான். இந்த பட்டம் வேறு எந்த நபிக்கும் தரப்படவில்லை. 

5) ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முன்னர் வந்த எல்லா நபிமார்களுக்கும் இல்லாத 5 சிறப்புகள் எனக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. (புகாரி , முஸ்லிம், நஸயி) 

1) ஒவ்வொரு நபியும் அவர்களின் கூட்டத்தினருக்கு மட்டுமே சொந்தமாக அனுப்பபட்டிருந்தனர். நானோ கறுப்பர், சிவப்பர் ஆகியோம் (மனித இனம்) முழுமைக்கும் அனுப்பப்பட்டுள்ளேன். 11) போரில் கிடைத்த பொருள்கள் எனக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னர் அவை எவருக்கும் ஆகுமாக்கப்படவில்லை. 111) எனக்கு பூமி முழுவதும் துப்புரவாகவும், தொழுமிடமாகவும் ஆக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே எவரேனும் தொழுகை நேரத்தை அடைந்து விடின் அவர் எங்கிருப்பினும் சரியே தொழுதுகொள்ளவும். 1V) ஒரு மாதப் பயணத் தூரதிற்குமிடையில் எதிரிகள் இருப்பினும் அவர்கள் எனக்கு அஞ்சி நடுங்கும் அளவுக்கு எனக்கு இறைவன் உதவி நல்கியுள்ளான். V)சிபாரிசு செய்யும் முதல் உரிமை. 

6) திருக்குர்ஆன் 17:80 - இல் இதனால் உம்முடைய இறைவன் உம்மை புகழுக்குரிய இடத்திற்கும் (மகாமே மஹ்மூத்) உயர்த்தக் கூடும். இந்தப் பதவி வேறு எந்த நபிக்கும் இறைவன் வழங்கவில்லை. 

7. திருக்குர்ஆன் 108:2 இல் (நபியே) நிச்சயமாக நாம் உமக்கு (அல்கவ்ஸர்) மிகுதி (யான நன்மை) யினை வழங்கியுள்ளோம். இச்சிறப்பு வேறு எந்த நபிக்கும் வழங்கப்படவில்லை. 

8. மறுமையில் சொர்க்கத்திற்குப் பரிந்துரைக்கும் முதல் உரிமை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உண்டு. (முஸ்லிம் ஹதீஸ் எண். 330) 

9. இறைத் தூதர்களில் மிகுதியான மக்கள் பின்பற்றபப்டுவதும் நானே. (முஸ்லிம் ஹதீஸ் எண் 330) 

10. என் அடியார்களே! (குல் யா இபாதி) என்று அழைப்பதற்குரிய தனது உரிமையை அல்லாஹ் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே வழங்கியுள்ளான். (39:54) 

11. வேதங்கள் பெற்ற நபிமார்களுள் முழு மனித இனத்திற்கும், கியாமத் வரை முழுமையான இறுதியான வேதம் பெற்றவர் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே. 

12. நபி (ஸல்) அவர்கள் நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன் என்று கூறியுள்ளார். ( புகாரி 3340) 

ஆதம் நபி (அலை), நூஹ் (அலை), இப்ராஹீம் நபி (அலை), மூஸா நபி (அலை), ஈஸா நபி (அலை) ஆகியோரிடம் சென்று மக்கள் தங்களுக்காக பரிந்துரை செய்யும்படி வேண்டி பரிந்துரை கிடைக்கவில்லை. இறுதியில் ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் பரிந்துரைக்காக வருகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் இறுதி பரிந்துரை செய்ய இறைவனும் அவர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்கிறான். (அல் ஹதீஸ் 2 ஆம் பாகம் பக்கம் 630-631) 

13. (கப்ருகளிலிருந்து) எழுப்பப்படும் பொழுது நான்தான் மனிதர்களில் முதல்வனாக வெளிப்படுவேன். அவர்கள் இறைவன்பால் செல்லும்போது நான் தான் அவர்களுக்கு முன்னோடியாக இருப்பேன். அன்றி அவர்கள் நம்பிக்கை இழக்கும் போது நான் அவர்களுக்கு நன்மாராயம் (நற்செய்தி) கூறுவேன். அன்று என் கையில் புகழின் கொடி இருக்கும். என் இறைவனிடம் ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளில் மிகவும் சிறப்புள்ளவன் நான்தான். (ஆதாரம்: திர்மிதி, அறிவிப்பாளர் : அனஸ் (ரலி). 

14. மறுமை நாளில் நான் நபிமார்களுக்கெல்லாம் தலைவனாகவும் அவர்களின் பேச்சாளனாகவும் இருப்பேன். (ஆதாரம்:திர்மிதி) 

15. மறுமை நாளில் நான் சுவனபதியின் வாசலை அடைந்த அதனைத் திறக்குமாறு கோருவேன். அப்போது அதன் காவலர், நீர் யார் என்று என்னை வினவுவார். அதற்கு நான் முஹம்மது (ஸல்) என்பேன். அப்போது அவர் தங்களுக்கு முன்னர் எவருக்கும் வாசலைத் திறக்க வேண்டாம் என்றும், தங்களுக்கே அதனைத் திறக்க வேண்டும் என்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். எனக் கூறுவார் என அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். (அறிவிப்பாளர் ; அனஸ் (ரலி) ஆதாரம் : முஸ்லிம் ) 

16. அனைத்துலகுக்கும் அருட்கொடை (21:108) யாக வந்த ஒரே ஒரு நபி, ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே ஆவார்கள்.
Read more »

இரு வேறு ஈஸா நபிமார்கள்


பக்கம் 53 இல் அபூ அப்தில்லாஹ் எழுதுகிறார்: 

ஈஸா (அலை) அவர்கள், அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு குஷ்டரோகிகளையும், கடும் வியாதியஸ்தர்களையும் சுகப்படுத்தியது, இறந்தவர்களை உயிர்பித்தது. இப்படிப்பட்ட தனிச்சிறப்புகளை உடையவர்களாக ஈஸா (அலை) இருந்தார்கள். 

நம் பதில்: 

ஈஸா நபி (அலை) முதலில் வந்த போது செய்த அற்புதங்களை அபூஅப்தில்லாஹ் கூறியுள்ளார். ஈஸாநபியின் இரண்டாவது வருகையின் போது அவர் சிலுவையை முறிப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா வரியை நீக்குவார்; செல்வங்களை வாரி வாரி வழங்குவார்; நீதியை நிலைநாட்டுவார் தீர்ப்பு வழங்குவார்; தஜ்ஜாலைக் கொல்வார் என்று நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது. 

நம் கேள்வியாவது, முதலில் வந்த போது செய்த செயல்கள் அவர் இரண்டாவது வரும் போது செய்வார் என்று ஏன் கூறப்படவில்லை? இரண்டாவது வருகையில் செய்யும் செயல்கள் முதல் வருகையில் ஏன் சொல்லப்படவில்லை? இவ்விரண்டாம் தனித்தனியாகவும், வெவ்வேறானதாகவும் உள்ளனவே! ஏன்? 

ஈஸா நபி (அலை) அவர்களுக்கு மட்டும் கொடுத்த அந்த அற்புதங்களை அவர் இரண்டாவது வரும் போதும் செய்வார் என்று ஏன் கூறவில்லை? அப்போது உலகில் யாரும் இறக்கமாட்டார்கள் என்பதாலா? அல்லது குருடர்கள், தொழுநோயாளிகள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதாலா? அல்லது பறவைகளைப் படைப்பதற்கு களிமண் இருக்காது என்பதினாலா? அல்லது பறவைகள் போதிய அளவுக்கு இருந்ததினால் இனி பறவைகளைப் படைக்க வேண்டிய தேவை இல்லை என்பதனாலா? அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அவர் முன்பு படைத்தார். ஆனால் இரண்டாவது வருகையின் போது அல்லாஹ் அனுமதி கொடுக்க மறுத்து விட்டதனால் அவ்வாறு செய்யவில்லையா? ஈஸா நபி (அலை) அவர்கள் செய்த அற்புதங்கள் அனைத்தும் உவமை வடிவில் அமைந்தவை என்பதை அபூ அப்தில்லாஹ் உணரத் தவறி விட்டார். 

அடுத்து ஈஸா நபி (அலை) மீண்டும் வரும் பொது செய்வார் என்று கூறப்படும், பன்றியைக் கொல்வார் என்ற செயலை முதல் வருகையின் போது அவர் ஏன் செய்யவில்லை? பன்றிகள் அக்காலத்தில் இல்லை என்பதினாலா? 

முதல் வருகையின் போது ஈஸா நபி (அலை) ஏன் செல்வங்களை வாரி வாரி வழங்கவில்லை? ஈஸா நபி (அலை) அவர்களிடம் செல்வம் இல்லை என்பதாலா? அல்லது எல்லோரும் செல்வர்களாக இருந்ததினால் வாரி வழங்க வேண்டிய தேவை இல்லை என்பதலா? இச்செயல்கள் எல்லாம் உவமை வடிவில் அமைந்தவை என்பதை அபூ அப்திலாஹ் உணரத் தவறிவிட்டார். அது மட்டும் இல்லை. முதல் வருகையில் நீதியை நிலைநாட்டித் தீர்ப்பு வழங்காதது ஏன்? அக்காலத்தில் அவை சரியாக இருந்தன என்பதினாலா? அல்லது ஈஸா நபியால் அப்போது செய்ய முடியாது என்பதாலா? நவூதுபில்லாஹ். முதலில் வந்த போது தஜ்ஜாலைக் கொல்லவில்லையே! ஏன்? அவன் அப்போது இல்லை என்பதினாலா? அல்லது ஈஸா நபியால் கொல்ல முடியாது என்பதினாலா? நவூதுபில்லாஹ்? 

இருவேறு ஈஸா நபி என்பதால், இரு வேறு நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன என்பதை அபூஅப்தில்லாஹ் உணர்ந்து கொள்ளவேண்டும். 

மேலும், முதலில் வந்தவர் இஸ்ரவேலர் சமுதாயத்திற்கு மட்டும் வந்தவர். அவர் முழு உலகுக்கும் நபியாக வரமுடியாது. 

இரண்டாவது வரக்கூடியவர் முழு உலகுக்கும், நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி வரும் உம்மத்தி நபி என்பதால் இருவேறு விதமாகக் கூறப்பட்டுள்ளன. இதுவே உண்மை.
Read more »

Aug 8, 2014

இறந்தவர்கள் மீண்டும் உலகிற்கு வரமுடியாது


அபூ அப்தில்லாஹ்வின் அபத்தமான கூற்று.

அபூ அப்தில்லாஹ் தன்நூல் பக்கம் 36, 37-இல் திருக்குர்ஆன் 39:42 வசனத்தில் விளக்கியதற்கொப்ப, ஒருவரின் உயிரை 100 ஆண்டுகள் கைப்பற்றி வைத்திருந்து பின்னர் விடுவித்த விபரம் 2:259 வசனத்திலும் அதே போல் சிலருடைய உயிர்களை சுமார் 300 ஆண்டுகள் கைப்பற்றி வைத்திருந்து பின்னர் விடுவித்த விபரம் 18:25 வசனத்திலும் தெளிவுபடுத்தப் படுகின்றன. இதே அடிப்படையில் ஈஸா (அலை) அவர்களின் சில ஆயிரங்களோ பல ஆயிரங்களோ ஆண்டுகள் இறைவன் கைப்பற்றி வைத்திருந்து பின்னர் விடுவிப்பது பற்றி ஈமான் கொண்டவர்களுக்கு எவ்வித சந்தேகமும் எழாது என்று எழுதியுள்ளார். 

நம் பதில்: 

இந்த 5:117,118 வசனங்களில் கூறப்பட்டுள்ள கருத்திற்கும் 2:259, 18:25 என்ற வசனங்களைக் காட்டுவது பொருந்தாது. இப்போது இவ்விரு வசனங்களின் பொருளையும் விளக்கத்தையும் காண்போம். 

வசனம் 2:260 ன் பொருள்: அல்லது கூரை கீழாக விழுந்து கிடந்த ஒரு நகரத்தின் வழியாகச் சென்றவரைப் போல் ஆன ஒருவரைப் பற்றி நீர் கேள்விப்பட்டதில்லையா? அவர் இதன் அழிவிற்குப் பின்னர், இதனை எப்போது அல்லாஹ் உயிர்பிப்பான் என்று கேட்டார். பிறகு அல்லாஹ். அவரை எழுப்பி நீர் எவ்வளவு காலம் இந்நிலையில் இருந்தீர் எனக் கேட்டான். இதற்கு அவர் ஒருநாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதி நான் (இந்நிலையில்) இருந்தேன் என்றார். அதற்கு அவன் ஆனால் நீர் (இந்நிலையில்) 100 ஆண்டுகள் இருந்தீர். எனவே நீர் உமது உணவையும் உமது குடிநீரையும் பாரும். அது கெட்டுப்போகவில்லை. மேலும் உமது கழுதையைப் பாரும். நாம் உம்மை மக்களுக்கு ஓர் அடையாளமாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்துள்ளோம்). மேலும் எலும்புகளைச் சீராக இணைந்த பின்னர் அவற்றின் மீது தசையைப் போர்த்தியுள்ளோம். என்பதையும் பாரும் என்றான். எனவே அவருக்கு இது தெளிவாகிய போது. அவர் அல்லாஹ் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவன் என்பதை நான் அறிவேன் என்றார். 

1. இமாம் பக்ருதீன் ராஸி (அத்தப்ஸீருல் கபீர்), இமாம் அதீருத்தீன் முஹீத் அபூ அப்தில்லாஹ் அபூ ஹைய்யானுள் உந்துலூலி, மௌலான அபுல்கலாம் ஆஸாத் ஆகியோம் 2:259 வசனத்தில் வரும் நூறு ஆண்டுகள் எனபது, நூறு ஆண்டு காலத்தைக் குறிக்காது என்றும், இது இஸ்ரவேல் தூதர் எசக்கியேலுக்கு காட்டப்பட்ட ஆன்மீகக் காட்சி என்றும் கூறுகின்றனர். 

மேலும் முகம்மது பிக்த்தால், மௌலவி முஹம்மது அலி, தாருல் இஸ்லாம் பத்திரிக்கை ஆசிரியர் தாவூத்ஷா ஆகியோர் தாங்கள் எழுதிய திருக்குர்ஆன் தர்ஜுமாக்களில் மேற்கூறிய கருத்துக்களையே கூறியுள்ளார்கள். 

2. அழிந்து கிடக்கும் நகரம் எப்போது உயிர் பெரும் என்று கேட்கிறார். அதற்குப் பதிலாகத் தான் இறைவன் 100 ஆண்டுகள் ஆகும் என்பதை அவரை கனவில் 100 ஆண்டுகள் மரணித்தவராக்கி உயிர்பித்துக் காட்டி அந்த நகரம் உயிர் பெற, மக்கள் வாழுமிடமாக மாற 100 ஆண்டுகள் ஆகும் என்று கூறுகிறான். 

இறந்தவர் மீண்டும் மறுமையில்தான் உயிர் பெறுவார் எனபதும் இவ்வுலகிற்கு மீண்டும் வர முடியாது எனபதும் திருக்குர்ஆன் கூறும் அடிப்படைச் சட்டமாகும். திருக்குர்ஆன் ஏறக்குறைய 16 இடங்களில் இதுபற்றி கூறுகிறது அவையாவன: 39:43, 23:101, 21:96, 44:57, 40:12, 36:32, 36:38, 6:28-29, 2:168, 26:103, 39:59, 32:13, 56:84-87, 36:51, 57:14, 23:17-18, இந்த வசனங்கள் தவிர நபிமொழி (திர்மிதி, இப்னு மாஜா) களிலும் இந்த அடிப்படைச் சட்டம் கூறப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக இறைவன் செய்யமாட்டன். எனவே 2:260 இல் கூறப்பட்ட சம்பவம் ஒரு கனவு என்பது தெளிவாகிறது. 

திருக்குர்ஆன் 21:96 “ஏதேனும் ஓர் ஊரை நாம் அளித்துவிட்டால், அவ்வூரில் வாழ்ந்து வந்தவர்கள் இவ்வுலகிற்குத் திரும்ப வரமாட்டார்கள் என்பது விதிக்கப்பட்டுள்ளது.”

திர்க்குறான் 23:16,17 “பின்னர் நீங்கள் அதற்குப் பிறகு நிச்சயமாக மரணமடைபவர்களே. பிறகு மறுமை நாளில் நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.” 

திருக்குர்ஆன் 23:100,101 “அவர்களுள் ஒருவருக்கு மரணம் வந்துவிட்டால் அவர் கூறுவார்: என் இறைவா! என்னைத் திரும்ப அனுப்பி விடு. நான் விட்டு வந்த இடமாகிய (உலகத்தில்) நற்செயல்களை நான் செய்வதற்காக (என்னைத் திரும்பவும் அங்கு அனுப்பிவிடு) அது நடக்கக் கூடியதன்று. நிச்சயமாக அது அவன் பெரும் வெறும் பேச்சாகும். அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் ஒரு திரையுள்ளது.” 

எனவே இவ்வசனங்களிலிருந்து இறந்த ரூஹ் மீண்டும் உலகிற்கு வர முடியாது என்றும் இது இறைவனின் நியதி என்றும் விளங்குகிறோம். 

இதிலிருந்து நூறு ஆண்டுகள் அவர் மரணித்தவராக இருக்கவில்லை. என்றும் அவருக்குக் காட்டப்பட்ட கனவு, கஷ்பில் 100 ஆண்டுகள் மரணித்தவராகக் காணப்பட்டார் என்றும் விளங்கிக்கொள்கிறோம். 

ஹதீது 1: 

அப்துல்லாஹ் (ரலி) எனும் நபித்தோழர் போரில் வீர மரணம் அடைந்தார். அன்னாரைக் கனவில் கண்ட ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ்வின் மகன் ஜாபிர் (ரலி) அவர்களிடம் அது குறித்து கூறியதாவது. 

உன் தந்தையிடம் அல்லாஹ் உங்கள் விருப்பம் என்ன? கேளுங்கள் தருகிறேன் என்றான். அதற்கு அவர் தான் மீண்டும் உலகுக்குச் சென்று இறைவழியில் போரிட்டு மரணம் அடைய வேண்டும் என்று கூறினார். அதற்கு இறைவன் அது நடக்காது. இறந்தவர் மீண்டும் உலகிற்கு திரும்ப முடியாது என்று விதித்து விட்டேன் என்று கூறினான். (ஆதாரம்: இப்னுமாஜா – நஸயி) 

ஹதீது 2: 

தப்ஸீர் இப்னு கஸீரில் வருகிறது. உயிர்த் தியாகிகளின் உயிர்கள் பச்சை நிற பறவைகளின் வயிறுகளில் இருக்கும். அவை தாம் விரும்பியவாறு சொர்க்கத்தில் உண்டு கழிக்கும். பின்பு அவை அர்ஷின் கீழ் மாட்டப்பட்டுள்ள அலங்கார விளக்குகளில் வந்து அடையும். 

அப்போது உம்முடைய இறைவன் அவர்களைப் பார்த்து உங்களுக்கு ஏதேனும் தேவைகள் உள்ளனவா என்று கேட்பான். அதற்கு அவர்கள் எங்கள் இறைவா! உன் படைப்புகளுள் யாருக்கும் நீ வழங்காதவற்றை எல்லாம் எங்களுக்கு வழங்கியுள்ளாய். அதற்குப் பிறகு எங்களுக்கு என்ன தேவை என்று கூறுவார்கள். 

இவ்வாறு மீண்டும் மீண்டும் அல்லாஹ் கேப்பான். ஏதாவது கேட்காமல் விடமாட்டான் என்று உணர்ந்து எங்களை இவ்வுலகிற்கு (மீண்டும்) அனுப்பி வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவ்வாறு அனுப்பி வைத்தால் மற்றொரு முறை உனக்காக கொல்லப்படும் வரை உன் வழியில் போராடுவோம் என்று அவர்கள் கூறுவார்கள். இறைவழியில் உயிர்த்தியாகம் புரிவதால் கிடைக்கும் பலன் என்ன என்பதை அவர்கள் கண்கூடாகக் கண்டதே அவ்வாறு அவர்கள் கேட்பதற்குக் காரணமாகும். அப்போது இறந்தவர்கள் மறுபடியும் உலகத்திற்கு அனுப்பபடமாட்டார்கள் என்று ஏற்கனவே நான் முடிவு செய்து விட்டேன் என்று அல்லாஹ் கூறுவான். (தப்ஸீர் இப்னு கஸீர் – பாகம் 2, பக்கம் 253) 

4. கனவு என்ற சொல் 2:260 வது வசனத்தில் இடம்பெறவில்லை என்று கூறுவதாக இருந்தால், கனவு பற்றி திருக்குரானிலும் ஹதீதுகளிலும் கூறப்பட்ட சில இடங்களில் அச்சொல் இடம்பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும். 12:5 இல் யூசுப் தன் தந்தையிடம் கூறிய நேரத்தை (நினைத்துப் பார்ப்பீராக). “தந்தையே! நான், பதினோரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் கண்டேன். அவை எனக்கு சிரம்பணியக் கண்டேன். சிறையில் அவருடன் இரண்டு வாலிபர்களும் நுழைந்தனர். அவர்கள் ஒருவர் (அவரிடம் நான் என்னை திராட்சையைப் பிழிந்து கொண்டிருப்பதாகக் கண்டேன். (12:37) 

மேற்சொன்ன இரண்டு வசனங்களிலும் கனவு பற்றிக் கூறப்பட்டிருந்தாலும் கனவு என்ற சொல் இடம் பெறவில்லை. எனவே 2:260 வசனம் கனவுக் காட்சியாகும். 

5. அச்சம்பவத்தில் உணவும் நீரும் கேட்டுப் போகாததினால் உண்மையில் 100 ஆண்டுகள் என்பது இல்லை. கொஞ்ச நேரம் தான் என்பதும் கனவில்தான் 100 ஆண்டுகளாகக் காட்டப்பட்டது என்ற உண்மையும் புலனாகிறது. 

6. இந்த வசனத்தில் (2:260) மரணம் என பொருள் தரும் மௌத் என்ற சொல் வந்துள்ளதே எனக் கேட்டால் இந்த மௌத் என்ற சொல் தற்காலிகமாக உயிரைக் கைப்பற்றுதலாகிய தூக்கத்திற்கும் பொருந்தும் என 39:43 வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான். 

மேலும் மொழி வழக்கிலும் உறக்கம், சிறு மரணம் போன்றது என்று கூறப்பட்டுள்ளது. 

இவ்வாறே நபிமொழி வழக்கும் உண்டு1) துஆ பற்றி வரும் நபிமொழிகளிலும் உறங்கும் முன்பும் பின்பும் செய்யும் துஆக்களில் மௌத் என்னும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு உறக்கம் என்ற பொருள். 2) உங்கள் வீடுகளை கபர்களாக (உறங்கும் இடமாக) ஆகிக் கொள்ளாதீர்கள். என்னும் நபிமொழியில் வீடு உறங்குமிடமாக மட்டும் இருக்கக்கூடாது. தொழுகைக்கு பயன்படவேண்டும் என்னும் கருத்து உள்ளது. எனவே 2:260 வசனத்தில் இடம்பெறும் மௌத் எனும் சொல்லுக்கு ‘அவரை தூங்கச் செய்து’ என்பதே பொருள். 

7. தூக்கம் என்பது குர்ஆன் ஹதீது அடிப்படையிலும் நம் அன்றாட அனுபவத்தின் அடிப்படையிலும் கொஞ்ச நேரம் தான் என்பது தெளிவு. 300 ஆண்டுகள் உறங்கியதாக தவறாய்ப் பொருள் கொள்ளப்படுவதால் இதன் உண்மை விளக்கத்தைப் பார்ப்போம். திருக்குர்ஆன் 18:19 இல் நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பதாக கருதுகிறீர். ஆனால் அவர்களோ தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று அல்லாஹ் கூறுகின்றான். 

இவர்கள் 300 ஆண்டுகளாக உறங்கினர் என்று திருக்குரானில் எங்கும் கூறப்படவில்லை. மாறாக 300 மற்றும் 309 ஆண்டுகள் தங்கி இருந்தனர் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கியிருந்த காலத்தை இறைவனே நன்கறிவான் என்று 18:27 வசனம் கூறுகிறது. 

குர்ஆன் ஆகிய நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட மக்களின் உடல்கள் பூமியில் (இவ்வுலகில்) இருந்தன. அனால் ஹஸ்ரத் ஈஸா(அலை) அவர்களின் உடலும் 2000 ஆண்டுகளாக பூமியில் இருந்திருக்கும் என்றால் ஒரு வாதத்திற்காக தூக்கம் என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் ஹஸ்ரத் ஈஸா (அலை) அவர்களின் உடல் பூமியில் இல்லை. எனவே அவ்வாறு நம்புவதாகவும் இடமில்லை. 

மேலும் திருக்குர்ஆன் 18:19 இல் நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பதாகக் கருதுகிறீர். ஆனால் அவர்களோ தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதன் பொருள் சில தலைவர்கள் தமது சமுதாய மக்களை விழிப்புணர்வும், எழுச்சியையும் ஏற்படுத்துவதற்கா தூங்கியது போதும் விழித்தெழுங்கள் என்று கூறியது போலாகும். அக்குகைவாசிகளும் இன்னும் விழித்தெழவில்லை. தூங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பதாகும். அதாவது அவர்கள் குகையிலிருந்து வெளியேறும் எண்ணமோ, எழுச்சியோ, இன்னும் உருவாகவில்லை என்பதனைத்தான் அவ்வசனம் உணர்த்துகிறதேயொழிய உடல் உறக்கம் அன்று.
Read more »

Aug 5, 2014

ஈஸா நபி செய்த அற்புதங்கள் - 1


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 41-இல் இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்கள். 

நம் விளக்கம்

பி.ஜே யின் திருமறையின் தோற்றுவாய் எனும் நூலிலும் அந்த அற்புதங்களைப் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார். 

1. தந்தையின்றி பிறந்தது. 

2. தொட்டிலில் பேசியது.

3. பறவைகளைப் படைத்தது. 

4. இறந்தவரை உயிர்ப்பித்தது. 

5. பிறவிக் குருட்டையும் 

6. குஷ்டத்தையும் நீக்கியது. 

இக்கருத்துகள் திருக்குர்ஆனின் 5:110, 3:46, 3:47, 3:49 ஆகிய வசனங்களில் வருகின்றன. 

படைத்தல், உயிர் கொடுத்தல் என்று இறைவனுக்கு மட்டும் உரிய செயல்கள் ஈஸா நபிக்கும் வருகிறது. அதற்கு பொருள் கொடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவற்றை பி.ஜே போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை. 

ஒரு சொல்லை அல்லாஹ்வுக்கு பயன்படுத்தும் போது அவனது தகுதிக்கும் அந்தஸ்துக்கும் ஏற்றவாறு பொருள் கொடுக்க வேண்டும். அல்லாஹ்வைத் தவிர மற்றவர்களுக்கு அச்சொல்லைப் பயன்படுத்தும் போது இறைவனின் தகுதியைக் குறைத்து விடாதபடியோ நபியின் தகுதியை அளவுக்கு மீறி உயர்த்தி விடாதபடியோ பொருள் கொடுக்க வேண்டும் என்ற சாதாரணமான உண்மையைக் கூட பி.ஜே உணரவில்லை. இதனால் அவர் அல்லாஹ்வின் தகுதிக்கு ஈஸா நபியின் தகுதியை உயத்தி விட்டார். எப்படி, 

மக்களே உங்களிடம் கூறப்படுகின்ற உவமையைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றீர்களோ அவர்களால் ஒரு ஈயைக் கூடப் படைக்க முடியாது. அதற்காக அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்தாலும் சரியே, இது மட்டுமின்றி, ஓர் ஈ அவர்களிடமிருந்து ஒரு பொருளைப் பறித்துச் சென்றால், அவர்களால் அதனிடமிருந்து அதனை(க்கூட) விடுவிக்க முடியாது. அழைப்போரும் அழைக்கப்படுவோரும் மிகப் பலவீனமானவர்களேயாவர். 

அவர்கள் அல்லாஹ்வை (அவனது பண்புகளை) கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக்க வல்லமையுள்ளவனும் மிகைத்தவனும் ஆவான். (திருக்குர்ஆன் 22: 74-75) பி.ஜே யின் தமிழாக்கம். 

ஒருவரை அழைத்து பிராத்தனை செய்ய வேண்டுமானால் அதற்குரிய ஒரு தகுதியை இவ்வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். படைப்பாற்றல் எவனிடம் உள்ளதோ அவன் மட்டுமே பிராத்தனை செய்யப்பட தகுதியுடையவன், இறைவனை விட்டு விட்டு பிராத்திக்கப் படுபவர்கள் நபிமார்களாயினும், இறைநேசர்களாயினும் அவர்கள் எவருமே ஓர் ஈயைக் கூட படைத்ததில்லை. படைக்க இயலாது. எனவே, அல்லாஹ் பறவைகளைப் படைத்ததைப் போன்று ஈஸா நபி பறவையைப் படைக்கவில்லை என்று ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவரிடம் பறவையைப் படைக்கும் ஆற்றல் உள்ளதால் அவரிடம் பிராத்தனை செய்யலாம் என்று ஏற்க வேண்டும். பி.ஜே எதனை ஏற்கப் போகிறார்? 

22:75 - இல் அல்லாஹ் கூறுகின்றான். அவர்கள் அல்லாஹ்வை (அவனது பண்புகளை) கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. அதாவது ஈஸா நபிக்கும் அல்லாஹ்வைப் போல் படைப்பாற்றல் இருக்கின்றது என்று நம்புவதன் மூலம் அல்லாஹ்வின் கண்ணியத்தை ஈஸா நபிக்கு கொடுத்து அல்லாஹ்வின் கண்ணியத்தை குறைத்து விட்டார்கள். 

இதிலிருந்து நாம் தெரிவது என்னவென்றால், படைத்தல் பண்பு அல்லாஹ்வுக்கு வரும் போது அவனுடைய கண்ணியத்துக்கும் தகுதிக்கும் ஏற்ப பொருள் கொடுக்க வேண்டும். அப்பண்பு ஒரு நபிக்கு வரும் போது ஒரு மனித நபி என்ற அளவில் களிமண் போன்ற மனிதர்களை பச்சை நிறப் பறவைகள் போன்று சொர்க்கத்தில் பறந்து திரிபவர்களாக மாற்றுபவர் என்று நம்பவேண்டும். 

அடுத்து திருக்குர்ஆன் 16:20-21 வது வசனத்தில் அவர்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றார்களோ அவர்களால் (பொய்க்கடவுள்களால்) எதனையும் படைக்க முடியாது. மேலும் அவர்களோ (இறைவனால்) படைக்கப்பட்டவர்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். இன்று கிறித்துவ மக்களால் கடவுள் என்று அழைக்கப்படும் ஈஸா நபி எதனையும் படைக்க முடியாது என்று கூறும்போது அவர் பறவையைப் படைத்தார் என்று நம்புவது சரியா? 

அப்படி நம்பினால், ஈஸா நபி இறைவனால் படைக்கப்பட்டவர் என்றால் அவரால் பறவையை படைக்க முடியாது என்று நம்பவேண்டும். பறவையை படைத்தார் எனில் இறைவனால் படைக்கப்பட்டவர் அல்லர் என்று நம்ப வேண்டும். பி.ஜே எதனை நம்ப போகிறார்? 

(பொய்க்) கடவுளர் எதனையும் படைத்ததில்லை. அவர்களோ படைக்கப் படுகின்றனர். (திருக்குர்ஆன் 16:17 ). பி.ஜே யின் தமிழாக்கம். 

இவ்வசனத்தில் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்கள் எதனையும் படைக்க முடியாது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. 

இது அல்லாஹ்வின் படைப்பாகும். எனவே, நீங்கள் அவனையன்றி மற்றவர்கள் எதனைப் படைத்துள்ளனர் என்பதை எனக்குக் காட்டுங்கள். (திருக்குர்ஆன் 31:12) 

(பொய்த் தெய்வங்கள்) அவை பூமியில் படைத்திருப்பதை நீங்கள் எனக்குக் காட்டுங்கள். (35:40; 46:5 ) 

அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன். வேறுயாரும் எதனையும் படைத்ததில்லை. என்றால், ஈஸா நபி பறவையைப் படைத்திருக்கிறார் என்று நம்புபவர்கள் அல்லாஹ்விடம் ஈஸா நபி படைத்த பறவையைக் கொண்டு காட்டுவார்களா? 

முதன் முறையாகப் படைத்து அதனையும் திரும்பவும் செய்கின்ற எவராவது இணை வைப்பவர்களுள் இருக்கின்றனரா? முதன் முறையாகப் படைத்து அதனைத் திரும்பவும் செய்கின்றவன் அல்லாஹ் (மட்டும்) தான் (10:35 ) 

எதோ ஒரு பறவையை முதலில் படைத்தவர் ஈஸா நபி தான் என்று இவர்கள் ஈஸா நபியை இறைவன் முன் நிறுத்தப் போகிறார்களா? 

அவன் படைத்ததைப் போன்று அவை (பொய்க் கடவுள்கள்) படைத்ததன் காரணமாகவா அவற்றை அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக் கொண்டனர்? எனவே (தான் இரு) படைப்புகளும் அவர்களுக்கு ஒன்று போல் தெரிகிறதோ? (திருக்குர்ஆன் 13:17) 

ஈஸா நபி பறவையைப் படைத்தார் என்று நம்பும் பி.ஜே ஈஸா நபியை அல்லாஹ்வுக்கு இணையாக ஆக்கிக் கொள்கிறார். மேலும் ஈஸா நபி படைத்த பறவையையும் அல்லாஹ் படைத்த பறவைகளும் ஒன்று போல் அவர்களுக்குத் தெரிகிறது என்று இந்த வசனத்தின் மூலம் விளங்கிக் கொள்கிறோம். 

அல்லாஹ்வே உங்களைப் படைத்தவன். பின்னர் அவனே உங்களுக்கு உணவு அளித்தான். பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்தான். பின்னர் அவன் உங்களை உயிர் பெறச் செய்வான். உங்களால் இறைவனுக்கு இணையாக்கப்பட்டவர்களுள் எவரேனும் இச்செயல்களில் எதையாவது செய்கின்றனரா? அவன் தூயவனும் மேலும் அவர்கள் (அவனுக்கு) ஏற்படுத்தும் இணைகளை விட்டும் அவன் மிக்க மேலானவன். (திருக்குர்ஆன் 30:41) 

ஈஸா நபி பறவையைப் படைத்துள்ளார். இறந்தவர்களுக்கு உயிர் கொடுத்துள்ளார். எனவே இரண்டு செயல்களைச் செய்துள்ளார் என்று நம்பும் பி.ஜே இறைவனின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அப்படி நம்பினால் அவர் இறைவனுக்கு இணை வைத்தவரும் அல்லாஹ்வின் தூய்மைக்கும் அல்லாஹ்வின் மேன்மைத் தன்மைக்கும் களங்கம் கற்பித்தவரும் ஆவார். 

அப்படி என்றால், ஈஸா நபி களி மண்ணால் பறவையைப் படைத்துள்ளார் என்று திருக்குர்ஆன் 2 இடங்களில் கூறுகிறதே? என்ற கேள்வி எழும். 

அல்லாஹ் உலகில் உள்ள பறவைகள் முதல் ஈஸா நபி போன்ற மனிதர்கள் வரை அனைத்துப் படைப்புகளையும் படைத்தது போன்று ஈஸா நபி படைக்கவில்லை. மாறாக ஒரு மனித நபி களிமண் போன்ற மனிதர்களை மனிதனாக மாற்றி பிறகு அவனை மனிதப் புனிதனாக்கி ஆத்மீக வானில் பறந்து திரியும் பறவை போல் மாற்றினார் என்று பொருள். 

உயிர் கொடுத்தல் 

அல்லாஹ் மட்டுமே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறான். அவனைத் தவிர வேறு யாரும் இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது. இதுவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். 

1. ஈஸா நபி இறந்தவர்க்கு உயிர் கொடுத்தார் என்று திருக்குர்ஆனில் வருகிறதே என்றால் இறந்தவர்கள் மீண்டும் இந்த உலகிற்கு வர முடியாது என்று ஏறக்குறைய 16 இடங்களில் வருகிறது. இதில் ஒன்று 23:100 வசனம். இந்த வசனத்தைப் பற்றி பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 298 இல். 

உயிர்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை எனும் தலைப்பில் எழுதியுள்ளார். அதில், ஒருவர் மரணித்துவிட்டால் அவருக்கும் இந்த உலகத்திற்கும் இடையில் எந்த விதமான தொடர்பும் கிடையாது. அவர்களுக்குப் பின்னால் புலனுக்குத் தெரியாத மிகப் பெரிய திரை போடப்பட்டு விடுகிறது என்று இந்த வசனம் (திருக்குர்ஆன் 23:100) கூறுகிறது என்று எழுதியுள்ளார். 

பி.ஜே உண்மையில் இவ்வாறு நம்புகிறார் என்றால் ஈஸா நபி உயிர் பெறச் செய்த அந்த ரூஹ் அந்தத் திரையைத் தாண்டி எப்படி வந்தது? 

மலக்குல் மவ்த் – ரூஹைப் பறித்துச் செல்வார். ஆனால் பறித்த உயிரை திரையைக் கிழித்துக் கொண்டு எந்த மலைக்கு அந்த ரூஹைக் கொண்டு வந்து அந்த சடலத்தில் புகுத்தினார்? மலக்குல் மவ்த் போன்று மலக்குல் ஹயாத் பற்றி திருக்குரானிலோ நபிமொழியிலோ இல்லையே ஏன்? 

2. பேய் பிசாசு உண்டா எனும் தலைப்பில் பி.ஜே எழுதியுள்ள நூலில் இறந்து போன உயிர்கள் மீண்டும் இந்த உலகிற்கு வருவதில்லை என்பதற்கு பி.ஜே காட்டும் திருக்குர்ஆன், நபிமொழி ஆதாரங்கள் ஊருக்குத் தான் உபதேசமா? அந்நூலில் பி.ஜே எடுத்து வைக்கும் ஆதாரங்கள் ஈஸா நபி இறந்தவர்க்கு உயிர் கொடுக்கவில்லை என்பதற்குப் பொருந்தாதா? 

3. திருக்குர்ஆன் 8:25 வசனத்தில், நபி (ஸல்) உயிர் கொடுப்பதற்காக உங்களை அழைக்கும் போது அவர்க்குப் பதிலளியுங்கள் என்று வருகிறதே, நபி (ஸல்) அவர்கள் இறந்தவர்க்கு உயிர் கொடுத்தார் என்று பி.ஜே ஏற்றுக் கொள்வாரா? ஈஸா நபியுடனும் நபி (ஸல்) அவர்களுடனும் உயிர் கொடுத்தல் எனும் ஒரே சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

4. என் இறைவன் உயிர் கொடுப்பவன். மரணிக்க செய்பவன் என்று இப்ராஹீம் நபி அவர்கள் கூறியபோது நானும் உயிர் கொடுப்பேன்: மரணிக்க செய்வேன் என்று அவன் (இறைமறுப்பாளன்) கூறினான் என்று வருகிறது. (திருக்குர்ஆன் 2:259) 

இப்ராஹீம் நபியுடன் வாதிட்ட இறைமறுப்பாளனுக்கும் அல்லாஹ்வைப் போல் இறந்தவனுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் உள்ளது என்று பி.ஜே ஏற்றுக் கொள்வாரா? 

5. தஜ்ஜால் இறந்தவரை உயிர்பிப்பான். ஆனால் மற்றொரு தடவை அவனால் இதைச் செய்ய முடியாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர் என்று பி.ஜே திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில் அவ்லியாக்களின் அற்புதங்கள் எனும் தலைப்பில் எழுதியுள்ளார். 

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணை வைத்தல் அன்று, மாறாக இறைவனது தன்மையில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போல மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணை வைத்தலாகும். ஷிர்க்கின் இந்த இலக்கணத்தை பி.ஜே திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில் பரிந்துரையை வேண்டுவது குற்றமா எனும் தலைப்பில் எழுதியுள்ளார். இதன் அடிப்படையில் தஜ்ஜால் அல்லாஹ்வின் ஒரு பண்பாகிய உயிர் கொடுத்தல் எனும் பண்பை, ஒரே ஒரு முறை செய்ததாக பி.ஜே நம்புகிறார். இது இணை வைத்தல் இல்லையா? இணை வைத்தல் எனும் கொடிய விஷத்தை ஒருவன் ஒரே ஒரு முறை சாப்பிட்டால் அவன் சாக மாட்டான் என பி.ஜே நம்புகிறாரா? 

6. பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 24 இல் கொலையாளியைக் கண்டு பிடித்தல் எனும் தலைப்பில் 2:72 வசனத்திற்கு விளக்கமாக, மூஸா நபியவர்கள் இறந்தவனை மாட்டின் ஒரு பகுதியால் அடித்து அவனை உயிர் பெறச் செய்திருப்பதாக நம்புகிறார். ஆனால் மூஸா நபியின் மீது அவரது சமுதாயம் ஹரூன் நபியைக் கொன்றதாக பழி சுமத்திய போது மூஸா நபி, தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க மாட்டின் ஒரு பகுதியால் ஹாரூன் நபியின் உடலில் அடித்து உயிர் பெறச் செய்யவில்லையே ஏன்? (பி.ஜே திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 394 காண்க) 

7. மேலே கூறியவற்றை தொகுத்துப் பார்க்கும் போது, 

1) அல்லாஹ்வுக்கு மட்டுமே இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் ஆற்றல் உள்ளது. வேறு எவர்க்கும் இல்லை. 

2) இறந்த உயிர்கள் மீண்டும் திரும்பி இந்த உலகத்திற்கு வராது என்ற கருத்தை நிரூபிக்கும் திருக்குர்ஆன், நபிமொழி சான்று பற்பல உள்ளன. இது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் ஈஸா நபி , நபி (ஸல்) மூஸா நபி, இறை மறுப்பாளன், தஜ்ஜால் ஆகியோர் இறந்தவருக்கு உயிர் கொடுத்துள்ளார் என்ற தவறான நம்பிக்கை காணப்படுகிறது. அப்படியெனில், திருக்குர்ஆனில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன என்று பி.ஜே நம்புகிறாரா? 

8. அல்லாஹ் இறந்தவர்க்கு உயிர் கொடுத்து எழுப்புவது கியாமத் நாளில்தான், அதற்கு முன் உயிர் கொடுப்பதில்லை, ஆனால் ஈஸா நபி (அலை) உடனே உயிர் கொடுத்து எழுப்பியதாக பி.ஜே நம்புகிறார். அப்படி எனில் ஈஸா நபியை அவர் அல்லாஹ்வை விட அதிகமாக உயர்த்தியிருப்பதாக தெரிகிறது (நவூதுபில்லாஹ்) 

9. திருக்குர்ஆனில் இரண்டு வகை வசனங்கள் உள்ளன. ஒன்று அடிப்படை வசனங்கள். இரண்டு உவமை வடிவிலான வசனங்கள். 

அல்லாஹ் ஒருவனே: அவனே அனைத்தையும் படைப்பவன்: அவன் அனைத்தையும் மரணிக்கச் செய்பவன்: அவனே இறந்தவர்களை உயிர்பிப்பவன், இவை திருக்குர்ஆனின் அடிப்படை வசனங்களாகும். 

ஈஸா நபி படைத்தார்; உயிர் கொடுத்தார்; குருடர்களை குணப்படுத்தினார்; தொழு நோயாளிகளை குணப்படுத்தினார் என்பவை உவமை வடிவிலானவை. இவற்றிற்கு, அடிப்படை வசனங்களுக்கு முரண்படாத வகையில் பொருள் கொடுக்க வேண்டும். உதாரணமாக, ஈஸா நபி இறந்த பிறகு மறுமையில் அவர்க்கு உயிர் கொடுத்து எழுப்புபவன் அல்லாஹ்வே, ஆனால் ஈஸா, நபி என்ற அடிப்படையில் அவரது சமுதாய மக்கள் ஆன்மீக மரணம் அடைந்து கிடந்த போது அம்மக்களுக்கு ஆத்மீக உயிர் கொடுத்து எழுப்பியவர் ஈஸா நபி என்று அதற்குப் பொருள் கொடுக்க வேண்டும். ஈமான் இல்லாதவர்கள் இறந்தவர்கள் ஆவர். அவர்களுக்கு ஈமானை கொடுப்பது உயிர் ஊட்டுவதாகும். 

இக்கருத்தை திருக்குர்ஆன் 6:123 வசனம் விளக்குகிறது. ஒருவன் (நிராகரிப்பினால்) மரணித்தவனாக இருந்த பிறகு (நேர்வழியின் மூலம்) அவனை நாம் உயிர்ப்பித்து அவனுக்கு (ஈமான் எனும்) ஒளியை நாம் கொடுத்து அதன் மூலம் மனிதர்களிடையே நடக்கிற அவன் (குப்ர் எனும்) இருள்களில் (சிக்கி) இருந்து அவற்றை விட்டும் வெளியேற முடியாதவனைப் போல் ஆவானா? 

10. ஈஸா நபியின் சிறப்பு எதுவென்றால் அவர் உவமை வடிவில் தான் தூதுச் செய்தியை மக்களுக்கு ஊட்டினார். எனவே அவர் பற்றிய இந்த செய்திகளும் உவமை வடிவில் கூறப்பட்டுள்ளன. 

11. அல்லாஹ்வுக்கும் உவமை கூறாதீர்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது ( ) 

இதற்கு பி.ஜே அல்லாஹ்வைப் பற்றி கூறுவதென்றால் வக்கீல், நீதிபதி, அதிகாரி என்றெல்லாம் உதாரணம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். ஆல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லாததால் எதையும் உதாரணம் காட்டிப் பேசலாகாது என அல்லாஹ் சொல்லித் தருகிறான் என்று திருமறையின் தோற்றுவாய் எனும் நூலில், உதாரணங்கள் ஆதாரங்களாகுமா? எனும் தலைப்பில் எழுதியுள்ளார். 

அல்லாஹ் தனக்கு உவமை கூறாதீர்கள் எனக் கூறியது வக்கீல், நீதிபதி என்று கூறும் உவமைகள் அல்ல. ஈஸா நபி இறந்தவர்க்கு அல்லாஹ்வை போல் உயிர் கொடுத்தார் என்று கூறுவது தான் அல்லாஹ்வுக்கு, ஈஸா நபியை உவமை கூறுவதாகும். எனவே அவனைப் போல் எதுவுமில்லை. (திருக்குர்ஆன் 42:11) என்றும் அவனுக்கு நிகராக எவனுமில்லை (112:4) என்றும் திருக்குர்ஆன் கூறுவதால் ஈஸா நபி இறந்தவர்க்கு அல்லாஹ்வைப் போல் உயிர் கொடுத்தார் என்று கூறுவது அல்லாஹ்வுக்கு உவமை கூறுவதாகும். அதாவது ஈஸா நபி அல்லாஹ்வைப் போல அவனுக்கு நிகராக உள்ளார் என்று நம்புவதாகும். 

குருடர்களையும் நோயாளிகளையும் குணப்படுத்துதல்

இவையும் உவமை வடிவில் கூறப்பட்டவையாகும். ஈஸா நபி புறக்கண் குருடர்களையும், உடல் நோயாளிகளையும் குணப்படுத்த வரவில்லை. அவர் அகக் குருடர்களையும் அறிவுக் குருடர்களையும் ஆத்மீக நோயாளிகளையுமே குணப்படுத்த வந்தார். உலகில் வந்த அனைத்து நபிமார்களும் இந்தப் பணியைச் செய்யத்தான் வந்தனர். திருக்குர்ஆனில் புறக்கண் குருடர்களைப் பற்றி பொதுவாக சில இடங்களில் வருகிறது. (அவை 25:74, 6:105, 47:24, 41:18 ஆகிய வசனங்களாகும்.) 

1) உங்கள் வீடுகளிலோ சாப்பிடுவது நோயாளியின் மீதும் குற்றமில்லை. ஊனமுற்றவர் மீதும் குற்றமில்லை. குருடர் மீதும் குற்றமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ சாப்பிடுவது உங்கள் மீது குற்றமில்லை. (திருக்குர்ஆன் 24:62) 

இந்த வசனங்களில் சில வீடுகளைக் குறிப்பிட்டு இவர்களின் வீடுகளில் நோயாளி, குருடர், ஊனமுற்றவர்கள் சாப்பிடுவது குற்றமில்லை என்று கூறப்பட்டுள்ளது. 

2) போருக்குச் செல்லாமல் இருப்பது குருடர் மீதும் குற்றமில்லை. நொண்டியின் மீதும் குற்றமில்லை. நோயாளியின் மீதும் குற்றமில்லை. (திருக்குர்ஆன் 48:18) 

3) தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக அவர் முகம் சுளித்து புறக்கணித்து விட்டார். (80:1-2) 

இந்த இடங்களில் மட்டுமே புறக்கண் குருடர்களைப் பற்றி வந்துள்ளன. ஏனைய எல்லா இடங்களிலும் அகக்கண் குருடர்களைப் பற்றியே வந்துள்ளன. இத்தகு கருத்துக் குருடர்களை குணப்படுத்தவே ஈஸா நபி வந்தார்கள். ஏன் எல்லா நபிமார்களும் வந்துள்ளனர். (2:19, 2:172, 10:44, 27:82, 30:54, 43:21, 22:47, 5:72, 6:105, 17:98, 25:74) இவ்வாறே உடல் நோயாளிகளைப் பற்றியும் சில வசனங்களில் (24:62, 48:18, 9:91, 73:21, 26:81, 2:185-186, 2:196, 4:44,107, 5:7 ) வந்துள்ளன. நான் நோயாளியாக இருக்கின்றேன் (37:39) என இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் கூறினார்கள். இவை உடல் நோயாளிகளைப் பற்றி வரும் இடங்களாகும். ஏனைய இடங்களில் ஆத்மீக நோய்களைக் குறித்தே வருகிறது. ஈஸா நபி குணப்படுத்திய நோய் ஆத்மீக நோய் ஆகும். ஏனென்றால் உடல் நோய்களைக் குணப்படுத்த உலகில் பல மருத்துவர்களும், மருந்துகளும் உள்ளன. ஆனால் இறைவனுடன் தொடர்புடைய ஆத்மீக நோய்களைக் குணப்படுத்தவே நபிமார்களை அல்லாஹ் அனுப்புகின்றான். 

(உள்ளத்தின் நோயைப் பற்றி திருக்குரானில் 2:11, 5:53, 8:50, 9:125, 22:54, 24:51, 33:13, 33:33, 33:61, 47:21, 47:30, 74:32, 24:6 26:81, 48:18, 2:185-186,196; 4:44,103; 5:7, 9:91, 73:21 போன்ற வசனங்களில் கூறப்பட்டுள்ளன.) 

2:19,172; 10:44, 27:82, 30:54, 43:41, 17:98, 25:74, 6:105, 5:72, 22:47, 47:24, 41:18 போன்ற வசனங்களில் ஆத்மீகக் குருடர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளன. ஒரு வாதத்திற்காக அவை உடல் நோய்கள் என்று வைத்துக் கொண்டால், 

முஸ்லிம் ஹதீஸ் எண் 5735: 

ஒரு சாதாரண சிறுவன் குருடர்களைக் குணப்படுத்துகின்றான். தொழு நோயாளிகளையும் பிற நோய்களையும் குணப்படுத்துகின்றான். தன்னை மலையிலிருந்து உருட்டிக் கொள்வதற்கு அனுப்பட்ட அரச வீரர்களை மலையை குலுங்க வைத்து தப்புகிறான். தன்னைப் படகில் ஏற்றி கடலில் எறிந்து கொல்ல வந்த வீரர்களை மறக்களைத்திளிருந்து விழ வைத்து தப்புகிறான் என்று அந்த நபிமொழி கூறுகிறது. எனவே ஒரு சாதாரண சிறுவனும். துஆவினால் அந்த அற்புதங்களைச் செய்துள்ளான். எனவே ஈசா நபி மட்டும் செய்தார் என்பதற்கு இடமில்லை.
Read more »

Aug 1, 2014

மவ்லான உபைதுல்லாஹ் சிந்தி அவர்களின் பார்வையில் ஈஸா (அலை) அவர்களின் மரணம்


உபைதுல்லாஹ் சிந்தி இவர் சியால்கோட்டில் உப்பல் கத்ரி என்ற குடும்பத்தில் 1872 மார்ச் 10 இல் பிறந்தவர். இவர் மாற்று மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு மாறியவர். தாருல் உலூம் தேவ்பந்த் மத்ராஸாவில் படித்து இஸ்லாமிய கல்வியை பயின்று பிராச்சாரகராக மாறியவர். இவர் 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று காலமானார். இவர் தேவ்பந்த் பிரிவில் பிரசித்து பெற்றவர். இவர் குர்ஆனுக்கு விளக்கம் எழுதியவர். இவர் எழுதிய தஃப்சீரின் பெயர் "இல்ஹாமூர் ரஹ்மான் ஃபி தஃப்சீருல் குர்ஆன்" என்பதாகும். இந்த தஃப்சீரில் முஸ்லிம்கள் ஈஸா அலை அவர்கள் உயிரோடு இருக்கிறார் என்று வைத்துள்ள கொள்கையானது பொய்யானது இது யூதர்களிடமிருந்து வந்த கொள்கை, கட்டுக் கதை ஆகும் என்று கூறியுள்ளார். அது மட்டுமல்ல ஈஸா அலை உயிரோடு உள்ளார் என்பதற்கு குர்ஆனில் எந்த வசனமும் இல்லை என்பதையும் ஆணித்தரமாக கூறியுள்ளார். அவர்கள் இது சம்பந்தமாக கூறியுள்ள விஷயத்தை நாம் கோடிட்டு காட்டியுள்ளோம். அதன் பொருள்: 

"அதாவது "முமீதுக்க" நான் உன்னை மரணம் அடைய செய்வேன். மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருக்கக்கூடிய ஈஸா உயிரோடு இருக்கிறார் என்ற கொள்கையானது யூதர்களின் கட்டுக்கதையாகும். மேலும் சாபியின் சுய கருத்தைக் கொண்ட கதையாகும். முஸ்லிம்களில் உஸ்மான் (ரலி) காலத்தில் நடந்த குழப்பத்திற்கு பிறகு அன்சார் பனி ஹாஷிம் அவர்கள் மூலமாக இந்த விஷயம் பரப்பட்டுள்ளது. இவர் சாபியும், யூதராகவும் இருந்தவர்.........( கோடிட்டு காட்டியதிற்கான பொருள்:)

"குர்ஆனில் ஈஸா மரணிக்கவில்லை என்பதை நிரூபிக்கக்கூடிய எந்த வசனமும் இல்லை"

மூல ஆதாரத்தை மேலே பார்க்கவும் 
Read more »

ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒரு உம்மத்தி நபி வருவார்


திருக்குர்ஆன் விளக்க அட்டவணை எண் 187 இல் இறுதி நபித்துவம் எனும் தலைப்பில் பி.ஜே இவ்வாறு எழுதுகிறார்: 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி இறுதித் தூதர். அவர்களுக்குப் பின் எந்த நபியும் தூதரும் வரவே முடியாது என்பதற்கு இவ்வசனங்கள். (4:79,170, 7:158, 9:33, 10:57,108, 14:52, 21:107, 22:49, 33:40, 34:28, 62:3) சான்றுகளாக உள்ளன. 

மனித குலத்திற்கே உம்மைத் தூதராக அனுப்பியுள்ளோம். (திருக்குர்ஆன் 4:79, 4:170, 6:19, 7:158, 14:52, 33:40) என்பதும் அவர்களுக்குப் பின் நபியோ தூதரோ வரமாட்டார்கள் என்பதைக் குறிக்கிறது. 

நம் விளக்கம்: 

பி.ஜே காட்டியுள்ள வசனங்கள் முழுவதையும் படித்தால் அவற்றுள் 4 வகையான கருத்துகள் கூறப்பட்டுள்ளன. இந்த வசனங்களின் பொருளை இத்தலைப்பின் இறுதியில் பார்க்கவும். நான்கு வகையான கருத்துக்கள். 

1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முழு உலகுக்கும் அனுப்பப்பட்ட தூதர் ஆவார். 

2) திருக்குர்ஆன் முழு உலகுக்கும் அனுப்பட்ட வேத நூல். 

3) நபி (ஸல்) அவர்கள் நபிமார்களுள் காத்தம் ஆவார். 

4) நபித் தோழர்களுடன் சேராத பிற மக்களுக்காக (ஒரு தூதரை அனுப்புவான்) 

(அ) நபி (ஸல்) அவர்கள் மனித இனம் முழுமைக்கும் அனுப்பப்பட்டவர். அவர் கொண்டு வந்த வேதம் முழு உலகுக்கும் இறுதி வரை வேதம் என்பதால், இனி மேல் உலகுக்கு ஒரு வேதம் வராது என்று ஏற்றுக் கொள்ளலாமே தவிர அவர்கள்தான் இறுதி நபி என்று ஆகாதே!

(ஆ) அப்படி என்றால் இதற்கு முன்னர் வந்த நபிமார்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் வந்துள்ளனர். அவர்களுக்கு வந்த வேதமும் அக்காலத்துக்கு, அம்மக்களுக்கு முழுமையான வேதம்தான்.எனவே அந்த சமுதாயத்தில் ஒரே ஒரு தூதர் மட்டும் வந்திருக்க வேண்டும். வேறு எந்தத் தூதரும் வரவில்லை என்பதனை உலகில் யாராவது எடுத்துக் காட்ட முடியுமா? 

மூஸா நபி (அலை) அவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டும் வந்த ஒரு தூதர். அவருக்கு இறைவன் தௌராத் எனும் வேதத்தை கொடுத்தான். அது அம்மக்களுக்கு அக்காலத்துக்கு வேண்டிய முழுமையான வேதமாகத்தான் இருந்தது. (6:155 ) அனால் மூஸா நபியின் அடிச்சுவட்டில் தௌராத்தைப் போதிக்க ஏராளமான நபிமார்கள் வந்துள்ளனர். (2:88) என்று திருக்குர்ஆன் கூறுகிறது. 

ஆக ஒரு சிறிய சமுதாயாத்துக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முழுமைபெற்ற வேதத்தைப் போதிக்க பல நபிமார்கள் வந்துள்ளதால் நபி (ஸல்) அவர்கள் முழு உலகுக்கும் நபியாக அனுப்பபட்டுள்ளதாலும் முழு உலகுக்கும் இறுதிவரை முழுமையான வேதமாக திருக்குர்ஆன் இருப்பதாலும் அவர்களுக்குப் பிறகு நபி வரத் தேவையில்லை என்பது தவறாகும். 

(இ) அல்லாஹ்வின் பார்வையில் நபி (ஸல்) அவர்கள் தான் இறுதி நபி அவர்களுக்குப் பின்னர் எந்த நபியும் வரமாட்டார்கள் என்றால் அல்லாஹ் தன் திருமறையில் தெள்ளத் தெளிவாக பல இடங்களில் முஹம்மது நபிதான் இறுதித் தூதர். இனிமேல் எந்தத் தூதரும் வரமாட்டார் என்று சொல்லியிருக்க வேண்டும். அப்படி ஒரு இடத்தில் கூட சொல்லவில்லையே. பி.ஜே மேலே எடுத்துக் காட்டிய வசனங்களில் இப்படி எங்காவது சொல்லப்பட்டுள்ளதா? இல்லையே 

(ஈ) லா நபிய்ய பஅதி என்று நபிமொழிகளில் வந்துள்ளதே. அதற்கு எனக்குப் பிறகு நபி இல்லை என்று தானே பொருள் என்று கேட்டால் அந்த நபிமொழி இடம் பெற்றுள்ள நூல்களில் விளக்கவுரை நூல்களில் லா நபிய்ய பஅதி என்பதற்கு சரீஅத்துடைய எந்த நபியும் இல்லை என்றுதான் பொருள். இனிமேல் புதிய சரீஅத்துடன் எந்த நபியும் வரமாட்டார் என்று விளக்கம் தந்துள்ளார்கள் (அல்யவாகியது வல் ஜவாகிர், பாகம் 2, பக்கம் 24 இமாம் ஷிஹ்ராணி (ரஹ்). எனவே தௌராத்தைப் போதிக்க மூஸா நபியின் அடிச்சுவட்டில் ஏராளமான நபிமார்கள் வந்தது போல் திருககுர்ஆனைப் போதிக்க நபி (ஸல்) அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நபிமார்கள் வருவார்கள் என்பதுதான் திருக்குர்ஆனின் கருத்தாகும்.

உ) காத்தம் என்பதற்கு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னர் வந்த மார்க்க அறிஞர்கள் தந்துள்ள விளக்கத்தைக் காண்போம். 

காத்தமுன்னபியீன் என்பதற்கு இறுதி நபி எனப் பொருள் கொள்பவர்கள் காத்தம் என்ற சொல்லுடன் நபிய்யீன் (நபிமார்கள்) போன்று ஒரு பன்மை பெயர்ச்சொல் சேர்ந்து, அதற்கு காலத்தால் இறுதி என்ற பொருள் கொடுக்கப்பட்டிருப்பதற்கான ஒரேயொரு எடுத்துக்காட்டை ஹதீஸ்களிலிருந்தோ, அரபி நூல்களிலிருந்தோ, அரபி பத்திரிகையிலிருந்தோ காட்ட முடியுமா? ஒருபோதும் முடியாது. 

காத்தம் என்ற சொல்லுடன் ஒரு பன்மை பெயர்ச் சொல் சேரும் போது அதற்கு சிறப்பு என்பதே பொருள் என்பதற்கான பல உதாரணங்களை ஹதீஸ்களிலிருந்தும், அரபி நூல்களிலிருந்தும், பத்திரிகையிலிருந்தும் நாங்கள் காட்டுகிறோம், இதோ சில உதாரணங்கள். 

நபிமொழிகள்: 

1) ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைப் பார்த்து, அலியே! நீர் காத்தமுல் அவ்லியா (இறைநேசர்களில் சிறந்தவர்) ஆவீர். நான் காத்தாமுல் அன்பியா (நபிமார்களில் சிறந்தவர்) ஆவேன் என்று கூறினார்கள். (ஆதாரம் ஸஹ்பின் ஸஹீது தைலம் தப்ஸீருஸ் ஸாபி – அல் அஹ்ஸாப்) 

இந்த நபிமொழியில் வந்துள்ள காத்தமுல் அன்பியா என்பதற்கு நபிமார்களுள் இறுதியானவர் என பொருள் கொண்டால், ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களை இறுதியான வலியுல்லாஹ் என்றும் அவர்களுக்குப் பின்னர் எந்த வலியும் (இறைநேசரும்) தோன்றவில்லை எனவும் தவறாக நம்ப வேண்டியது வரும். 

2) ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஸ்ரத் அப்பாஸ் (ரலி) அவர்களை காத்தமுல் முஹாஜிரீன் (ஹிஜ்ரத் சிதவர்களில் சிறந்தவர்) எனக் குறிப்பிட்டார்கள். (ஆதாரம் கன்ஸுல் உம்மால், பாகம் 13, பக்கம் 519) 

அரபி மொழி நூல்கள் / பத்திரிகையிலிருந்து.....

1) காத்தமுஷ் ஷுஅரா : புகழ்பெற்ற அரபி கவிஞராக திகழ்ந்த அபுதமாம் (கி.பி 788-845) என்பவரைக் குறித்து காத்தமுஷ் ஷுஅரா – கவிஞர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல்: வாபியத்துல் அயான், பாகம் 1, பக்கம் 123, கெய்ரோ, எகிப்து) 

2) காத்தமுல் அவ்லியா: இமாம் ஷாபி (ரலி) அவர்களை காத்தமுல் அவ்லியா – இறை நேசர்களுள் சிறந்தவர் என்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. (நூல்: அல் துஹ்பதஸ் ஸுன்னியா, பாகம் 45) 

3) காத்தமுல் அயிம்மா: எகிப்தைச் சேர்ந்த இமாம் அப்தா (1845-1905) காத்தமுல் அயிம்மா – இமாம்களுள் சிறந்தவர் என அழைக்கப்படுகிறார். (நூல், தப்ஸீர் அல் பாத்திஹா, பக்கம் 148) 

4) காத்தமுல் முஜாஹிதீன்: அஸ்ஸய்யத் அஹ்மத் ஸனூஸி என்பவர் காத்தமுல் முஜாஹிதீன் – போராளிகளுள் சிறந்தவர் என அழைக்கப்படுகிறார். (பத்திரிக்கை : அல் ஜாமியத்துல் இஸ்லாமிய்யா, பாலஸ்தீன், நாள் : 27, முஹர்ரம், ஹிஜ்ரி 1352) 

5) காத்தமத்துல் முஹக்கிகீன்: அஹ்மத் பின் இத்ரீஸ் என்பவரை குறித்து காத்தமுல் முஹக்கிகீன் – ஆராய்ச்சியாளர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல்: அல் ஆகாதுன் நபீஸ்) 

6) காத்தமுல் முகத்திஸீன்: டில்லியைச் சேர்ந்த இறைநேசர் ஸாஹ் வலியுல்லாஹ் அவர்கள் காத்தமுல் முஹத்திஸீன் – ஹதீஸ் கலையில் சிறந்தவர் என அழைக்கபடுகிறார்கள். (நூல்: இஜாஸா நாபியா பாகம் 1) 

7) காத்தமுல் ஹுப்பாஸ்: அல் ஸைஹு ஷம்சுத்தீன் அவர்களை காத்தமுல் ஹுப்பாஸ் – திருக்குர்ஆனை மனனம் செய்தவர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல்: அல் தஜ்ரிதுல் ஸரீஹ் முகத்திமா, பக்கம் 4) 

8) காத்தமுல் புக்கஹா: அல் ஸைஹு நஜீத் என்பவரை கத்தமுள் புக்கஹா – மார்க்க சட்ட வல்லுனர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (ஆதாரம்: ஸிராத்தல் முஸ்தகீம் யஹ்பா, நாள் : 27 ரஜப் ஹிஜ்ரி 1354) 

9) காத்தமுல் முபஸ்ஸிரீன்: அல் ஸைஹு ரஷீத் ரஸா என்பவரை காத்தமுல் முபஸ்ஸிரீன் – திருக்குர்ஆன் விரிவுரையாளர்களுள் சிறந்தவர். என அழைத்துள்ளனர். 

10) காத்தமுல் ஹுக்காம்: சிறந்த ஆட்சியாளரை காத்தமுல் ஹுக்காம் – மன்னர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. 

11) காத்தமுல் அவுஸியா: ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களைக் குறித்து காத்தமுல் அவுஸியா – ஆலோசனை கொடுப்பவர்களில் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல் மினாருல்ஹுதா, பக்கம் 106) 

12) காத்தமுஷ் ஷுஅரா: சிரியா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற அரபி கவிஞரும் எழுத்தாளருமான அபுஅலா அல்மெரி (கி.பி 973 - 1058) என்பவரைக் குறித்து கத்தமுஷ் ஷுஅரா – கவிஞர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுள்ளது. (நூல் முகத்தமா தீவானுல் முதனப்பி, எகிப்து, பக்கம் 4) 

காத்தமுல் முஹக்கிகீன்: அப்துல் பஸ்ல் அலூஸி என்பவர் காத்தமுல் முஹக்கிகீன் – ஆராய்ச்சியாளர்களுள் சிறந்தவர் என கூறப்பட்டுளார். (நூல்: ரூஹுல் மஆனி, முதற்பக்கம்) 

மேற்கண்ட சான்றுகள் இடம்பெற்றுள்ள நூற்களும், பத்திரிகைகளும் அஹ்மதிய்யா முஸ்லிம் ஜமாஅத்தால் வெளியிடப்பட்டவை அல்ல, மேற்கண்ட சான்றுகள் அனைத்தும் காத்தம் என்ற சொல்லுடன் ஒரு பன்மை பெயர்ச்சொல் சேரும்போது அதற்கு சிறப்பு என்ற பொருளே தவிர காலத்தால் இறுதி என்ற பொருள் இல்லை என்பதை ஆணித்தரமாகக் அறிவிக்கின்றன. 

இதிலிருந்து காத்தம் என்னும் சொல்லிற்குப் பிறகு இறைநேசர்களும், கவிஞர்களும், அறிஞர்களும், விரிவுரையாளர்கள் என்ற பன்மைச் சொல் வந்தால் அறிஞர்களுள் மிகச் சிறந்தவர், இறை நேரசர்களுள் மிகச் சிறந்தவர், கவிஞர்களுள் மிகச் சிறந்தவர் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். நபிமார்களுள் காத்தம் என்பதும் நபிமார்களுள் மிகச் சிறந்தவர் என்றுதான் வரும். இறுதி நபி என்று பொருள் கொள்வது தவறாகும். என்று விளங்குகிறது.
Read more »