அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Dec 21, 2013

இயேசுவும் முக்கடவுள் கொள்கையும்


முக்கடவுள் கொள்கையில் அதாவது பிதா, குமாரன் பரிசுத்த ஆவி. என்ற மூவர் கூட்டணியில் – நம்பிக்கை வைப்பது கிருஸ்தவ சமயத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்ற மூவராகக் கடவுள் இருக்கிறார் என்றும் மூவரும் ஒன்றாக இணைந்து ஒரே கடவுளாக இருக்கிறார் என்றும், இம் மூவரும் ஒன்றாக இணைந்திருந்த போதிலும் இம் மூவரும் தனித்தனியே வல்லமையுடன் செயல்படத் தக்கவராய் இருக்கின்றனர் என்றுமே கிருஸ்தவ சமுதாயம் நம்பிக் கொண்டிருக்கிறது. இத்தகைய நூதனக் கொள்கையில் அவர்கள் நம்பிக்கை வைத்தே ஆகவேண்டும்.  

பைபிளில் இல்லாத கொள்கை: திரித்துவம் (trinity) என்ற முக்கடவுள் கொள்கை கிருஸ்தவ சமயத்தின் அடிப்படை என்ற அளவில் முக்கியத்துவம் பெற்றதாக இருப்பதால், கிறிஸ்தவர்களின் வேத நூலான பைபிள் அக்கொள்கையை விரிவாகவும் அதிக ஆழத்துடனும் முழுமையாகவும் எடுத்து வைக்கப்பட்டிருக்கவேண்டும் என்று கிருஸ்தவர்கள் மட்டுமல்ல உலகோர் அனைவரும் எதிர்பார்ப்பதில் வியப்பேதும் இல்லை. ஆனால் ஆட்சர்யமென்னவெனில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற அடிப்படையான சமயக் கருத்து திரித்துவம் என்ற முக்கடவுள் கொள்கை – வேதாகமத்தில் எவ்விடத்திலும் வலியுறுத்தப்படவில்லை. ஆதிகாலம் தொட்டு இப் பிரபஞ்சத்தை ஆண்டு பரிபாலித்துவரும் கடவுளைப் பற்றிய தத்துவமும் கொள்கை கோட்பாடும் காலம் கடந்ததாகவும் காலகாலமாக வரலாற்றில் நிரூபிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டுமல்லவா?

பிதா, குமாரன், பரிசுத்தஆவி

இயேசு கிறிஸ்துவின் காலத்தை கருத்தில் கொண்டு அவரது போதனைகளை சோதனைகளுக்கு உட்படுத்தினோம் என்றால் எந்த இடத்திலும் எந்த சந்தர்பத்திலும் முக்கடவுள் கொள்கையை இயேசு வலியுறுத்தவில்லை என்ற உண்மை பளிச்சென தெரியும். ஆயினும் கிருஸ்தவர்கள் முக்கடவுள் கொள்கையை ஆதரித்தவர்களாகக் பைபிளிருந்து சில மேற்கோள்களை நம் முன் எடுத்துவைக்கிரார்கள் எடுத்துக் காட்டாக.

“........நீங்கள் புறப்பட்டு போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞனஸ்தானாம் கொடுத்து...” மத்தேயு 28:19

பரலோகத்திலே சாட்சியிடுகிரரவர்கள் மூவர், பிதா வார்த்தை பரிசுத்த ஆவி என்பவர்களே இம் மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.(1 யோவான் 5:7) ஆகிய வசனங்களை காட்டலாம்.

மேற்சொன்ன வசனங்கள் இரண்டில் முதல் வசனம் இயேசு கிருஸ்துவே தம் வாயால் மொழிந்ததாக பைபிள் கூறுகிறது. இரண்டாவது வசனம் யோவான் என்பவரின் சொந்தக் கருத்து. மேலும் இயேசு குறிப்பிடும் மூவர் கூட்டணியில் இரண்டாம் இடம் வகிக்கும் ‘குமாரன்’ யோவானிடத்தில் “வார்த்தை”யாக மாறி உள்ளதை கவனியுங்கள். இவ்விவரங்களை மனதில் வைத்துக் கொண்டு முக்கடவுள் கொள்கையை தொடர்ந்து ஆராய்வோம்.

ஏசுவின் போதனை ஏகத்துவமே:

முக்கடவுள் கொள்கையை உருவாக்கி இயேசுபிரான் அதில் நம்பிக்கையும் கொண்டு போதித்து வந்தார் என்பது உண்மையாயின். இந்த முக்கியமான அடிப்படைக் கொள்கையைக் குறித்து தமது யூத மக்களிடம் குறிப்பாக தனது சீடர்களிடம் வலியுறுத்தி கூறவேண்டிய இயேசுவின் கட்டாயக் கடமையாக இருந்திருக்கும். ஆனால் பைபிளில் இயேசுவின் போதனைகளை திரட்டி ஆராய்ந்து பார்க்கும்போது முக்கடவுள் கொள்கைக்கு நேர்மாறாக எப்போதும் போதித்துவந்துள்ளார் எனவும் அந்த ஏக தேவனையே – ஒரே இறைவனையே வணங்கி வரவேண்டும் என்று இயேசு தொடர்ந்து போதித்து வந்துள்ளார் எனவும் அறிந்துகொள்கிறோம்.

இயேசுவுக்கு முன்னர் யூத மக்களுக்குகிடையே அவதரித்த அத்தனை தீர்க்கதரிசிகளும் பதித்து வந்தது, ஏக இறைக் கொள்கையே எனப் பழைய ஏற்பாடு தெளிவாக கூறுகிறது. இந்நிலையில் மோசே தீர்க்கதரிசியின் நியாயப் பிரமாணத்தையே ‘நிறைவேற்றுவதற்காக’ வந்துதித்த இயேசு பெருமான். அந்த நியாயப் பிரமானத்திற்கே முரணாக முக்கடவுள் கொள்கையை எவ்வாறு எடுத்துக் கூறமுடியும்?

இயேசு வலியுறுத்தும் கொள்கை.

“..... உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக....” (மத்தேயு 5:10)

“....., கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால், இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்...(மார்க்கு 12:25)

“..... நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே ...” (லூக்கா 18:19)

‘ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். (யோவான் 17:3)

சுவிசேஷர்கள் நால்வரும் பதிவு செய்த மேற்கண்ட வேத வசனங்கள் தேவனாகிய கர்த்தர் வேறு குமாரனாகிய இயேசு வேறு எனத் தெளிவாக இனம் பிரித்து காட்டிடவில்லையா? இயேசு தன் வாயாலே வெளிப்படுத்தியுள்ள வசனங்களும் தற்காலக் கிறிஸ்தவர்களின் முக்கடவுள் கொள்கையை உடைத்தெறிவதற்கு போதுமானவையில்லையா?

இந்நிலையில் பைபிள் கூறும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை கவனத்துடன் படித்துப் பார்த்தால் அவர் தமது வாழ்நாள் நெடுகிலும் ஏக இறை தத்துவத்தையே போதித்தும் பரப்பியும் வந்துள்ளதாக எவரும் எளிதில் கண்டுகொள்ளமுடியும் இஸ்ரவேலில் தோன்றிய இயேசு தனது போதனையின் படி முக்கடவுள் கொள்கையே தமது கடவுள் கோட்பாடு தமது தெய்வ நம்பிக்கை என்று ஒரு இடத்தில் கூட வலியுறுத்தவில்லை. தமது கடவுள் மூன்றாய் பிளவு பட்டு போயிருக்கிறார் என்றோ, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, என மூவர் கூட்டணி அமைத்துக் கொநிட்ருக்கிறார் என்றோ இயேசுநாதர் தனது போதனையில் எடுத்துரைக்கவில்லை. ஆனால் பைபிள் கூறும் அவரது வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள் பலவற்றில் ஏக தெய்வக் கொள்கையில்தான் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக கூறுவது மட்டுமின்றி தம்மை சுற்றியுள்ள யூத கோத்திரத்தார் அனைவருக்கும் அவ்வாறு போதிக்க தவறவுமில்லை. அவர் வாழ்வில் நிகழ்ந்த மிகக் கொடிய துயரமிக்க சிலுவை தண்டனைக்கு முன்னர் நடந்தேறிய சம்பவங்கள் அனைத்தும் இக்கருத்தையே கூறுகிறது.

தேவ குமாரன் என்றால் தேவ தூஷணமா?

இயேசுவை கைது செய்த யூதர்களுக்கு அவர் மீது குற்றம் சுமத்த தகுந்த காரணம் வேண்டும். அவரை சிலுவையில் அறையவேண்டுமாயில் அக்கொடிய தண்டனை கொடுக்குமளவுக்கு அவர் மீது குற்றம் சுமத்தவேண்டியது அவசியமல்லவா? அவர்கள் கண்டுபிடித்த குற்றம் என்ன தெரியுமா? கடவுளின் ஒரு பகுதியாக – ஓர் அங்கமாக – இயேசு தம்மையும் இணைத்துக் கொண்டார் என்பதுதான். அதாவது கடவுளின் குமாரன் என்று தன்னை வர்ணித்துக் கொண்டதால். அவர் தேவ தூஷணம் செய்தவராகிறார் என்பதே யூதர்களின் குற்றசாட்டு. ஏனெனில் ஏக தெய்வ வணக்க மூளையை கைக்கொண்டு நடந்து வந்த யூத சமுதாயத்தால் இறைவனுக்கு மகனாக தம்மைக் கற்பித்துக் கொண்ட இயேசுவின் செயலை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. இயேசுவின் போதனைகளை பொறுமையுடன் செவிமடுத்து சிந்தித்திருந்தால் அவர் மீது தேவ தூஷனக் குற்றம் சுமத்தியிருக்கமாட்டார்கள்.

ஆனால் பைபிளிருந்து நாம் அறிந்துகொள்வதென்ன? பிரதான ஆசாரியன் இயேசுவிடம் அவரது சீடர்களைப் பற்றியும் அவரது போதனையைப் பற்றியும் விசாரித்தபோது இயேசுபிரான் பதிலளித்ததென்ன? இதைக் குறித்து யோவான் சுவிசேஷகர் என்ன கூறுகிறார் என்பதைக் காண்போம்.

 பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீசரைக் குறித்தும் போதனைக் குறித்தும் விஷாரித்தான். இயேசு அவனுக்கு பிரதியுத்தமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன். ஜெப ஆலயங்களிலும் யூதர்கள் எல்லோரும் கூடி வருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன். அந்தரங்கத்திலே ஒன்றும் பேசவில்லை. நீர் என்னிடத்தில் விசாரிக்க வேண்டியதென்ன? நான் சொன்னவைகளை கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றான் (யோவான் 8:29)

மேலே காட்டிய இயேசுவின் வாக்கு மூலத்திலிருந்து அவரது போதனை ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவே போதிக்கப்பட்டிருக்கிறது எனத் தெளிவாக தெரிகிறது. தமக்கு முன்னர் வந்த தீர்க்கதரிசிகள் இறைத்தூதர்கள் வழியையே அவரும் பின்பற்றியுள்ளார். தமக்கு கிடைத்த தேவ வசனங்களை இறை வெளிப்பாடுகளை யூத மக்களுக்கு கூடுதல் குறைவின்றி அப்படியே கொடுத்திருக்கிறார். அதாவது முந்தைய தீர்க்கதரிசிகள் ஏக தெய்வ வணக்கத்தை போதித்தது போன்று இயேசுவும் போதித்துள்ளார்.


தன்னை இறைவனின் குமாரன் என்று சொன்னதால் தேவதூஷணம் செய்ததாக யூதர்கள் செய்த குற்றச்சாட்டுக்கு இயேசு பதிலளிக்கும் போது

அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார்.யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையாதேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்கபிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமாஎன் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை.


இந்த சூழலில் தேவ தூஷணம் இறைவனுக்கு அவமதிப்பு ஏற்படும்படியான செயல் எதையும் இயேசு செய்திருந்தார் என்றால் யூத ஆசாரியர்களும் மூப்பர்களும் ஆயிரக்கணக்கான் சாட்சிகளை கொண்டுவந்து சனாதரின் என்ற யூத உச்சநீதிமற்றத்தில் அவையோர் முன்னிலையில் நிறுத்தி எந்தக் கஷ்டமுமின்றி எளிதாக நிரூபித்திருக்கமுடியும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. வல்லமை மிக்க யூத சபையால் அவ்வாறு நடத்திக் காட்ட முடியவில்லை. அதற்க்கு நேர்மாறாகவே நடந்தது. இயேசுவுக்கு எதிராக சாட்சி கூற அதாவது பொய் சாட்சி பகர தமது மக்களுக்குள்ளேயே ஆட்களை அவர்கள் தேடியபோது தமது குற்றச்சாட்டை நிரூபிக்கதக்க விதத்தில் அதாவது இயேசுவின் தேவ தூஷணத்தை நிரூபிக்கும் பொருட்டு யூதர்களிளிருந்து ஒருவரை கூட கொண்டு வந்து நிறுத்த முடியவில்லை. உண்மையான சாட்சிகளைக் கொண்டுவரும் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியை தழுவிக் கொண்டதையே அவர்கள் கண்டனர்.

கொலை முயற்சியும், பொய் சாட்சியும்

இந்நிலையில் இயேசுவின் மீது தாங்களே பொய்யாகப் புனைந்துகொண்ட குற்றச் சாட்டினை அவையின் முன்னர் நிரூபிப்பதற்காக பொய் சாட்சிகளை கொண்டு வரவேண்டிய இழிநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். ஆயினும் சட்டப்பூர்வமான ஆதாரத்தையோ, அத்தாட்சியையோ அவர்களால் வழங்கமுடியவில்லை. இயேசுவை கொலை செய்வதற்கு சமயத் தலைவர்களுக்கிருந்து ஆர்வத்தை சுவிசெஷர் மத்தேயு இவ்வாறு கூறுகிறார்.

“பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய் பொய் சாட்சி தேடினார்கள் ஒருவரும் அகப்படவில்லை. அநேகர் வந்து பொய் சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை..”(மத்தேயு 26:59-60)

சுவிசெஷர் மார்க்கும் இதே கருத்தை இன்னும் சற்று விரிவாக கூறக் காண்கிறோம்.

“அப்போது பிரதான ஆசாரியரும் ஆலோசனை சங்கத்தார் அனைவரும் இயேசுவை கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாக சாட்சி தேடினார்கள் அகப்படவில்லை. அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய் சாட்சி சொல்லியும் அந்த சாட்சிகள் ஒவ்வவில்லை. அப்போது சிலர் எழுந்து கைவேலையாகிய இந்த தேவாளையத்தை நான் இடித்துப் போட்டு கை வேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று அவருக்கு விரோதமாய் பொய் சாட்சியம் சொன்னார்கள். அப்படி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமல் போயிற்று (மார்க்கு 14:55-59)

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.