அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jun 5, 2022

இன்றைய அஹ்மதிய்யா ஜமாஅத்தின் நிலையும் இறுதி நபிக்கொள்கையும்

முன் சென்ற முதலாவது மஸீஹ் அதாவது ஈஸா (அலை) அவர்களின் சமுதாயம் எவ்வாறு ரூஹுல் குத்தூஸினால் எழுப்பப்பட்ட இறையருளை நிராகரித்து, ஈஷா (அலை) அவர்களை தொடர்ந்து ஏற்பட்ட கிலாஃபத்தை தேர்வு செய்தார்களோ, அவ்வாறே இன்றைய நிஜாமிகள், இறைபுரத்திலிருந்து ரூஹுல் குத்தூஸினால் பலப்படுத்தப்பட்ட கலீபஃத்துல்லாஹ் தோன்றும்போது, இரண்டாவது ஈஸாவின் அதாவது, மஸீஹ் மவூது (அலை) அவர்களின் கிலாபத்தின் தொடரை தேர்வு செய்துகொண்டனர். மேலும், இன்றளவும் முதலாவது ஈஸா (அலை) அவர்களின் நேர்வழி பொருந்திய கலீஃபாக்களுக்கு பிறகு பெயர்தாங்கிய கலீஃபாக்களின் (போப்) ஆட்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

மேலும், இவர்களும் அமைப்பு ரீதியாக, பொருள் தியாகத்திலும், தங்களது சந்ததிகளை அவர்களின் இறைவனுக்கு வக்பு செய்வதிலும், அவர்களின் இறை இல்லத்தை அழகிய பிரமாண்டமாக எழுப்புவதிலும், சமூக சேவை மற்றும் கல்விகூடம், மருத்துவமனை என்று பல்வேறு கட்டமைப்புகளை ஒரு தலைமையின் கீழ் இயங்கி கொண்டுதான் உள்ளார்கள் என்பதுதான் வியப்புக்குரிய ஒற்றுமை!!!

மேலும், எவ்வாறு முஸ்லிம்களுக்கு அவர்களின் இறுதிநபி கொள்கைக்கு திருகுர்ஆன் துணை நிற்பதில்லையோ, அதே போல இவர்களின் நபிமார்கள் அல்லாத கலீஃபாமார்களை மறுமைவரை செல்லும் கூற்றிற்கும் திருகுர்ஆன் துணை நிற்பதில்லை. இன்னும் வியப்புக்குரிய ஒற்றுமை என்னவென்றால் எவ்வாறு வேறு பிரிவு முஸ்லிம்கள் அவர்களின் இறுதி நபி கொள்கைக்காக அவர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையை “லா நபிய்ய பஃதீ” என்ற நபிமொழியின் தவறான புரிதல் வைத்தார்களோ, அவ்வாறே இன்றைய நிஜாமிகள் “கிலாஃபத்அலா மின் ஹாஜி நுபுவ்வத்” என்ற நபிமொழியின் தவறான புரிதலில் தங்களது ஒட்டுமொத்த கொள்கையையும் வைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதாவது, முஸ்னத் அஹ்மதில் பதியப்பட்ட நபிமொழி இவ்வாறு வருகின்றது;-

"அல்லாஹ் நாடும் வரை உங்களிடத்தில் இந்த நுபுவ்வத் இருக்கும். பிறகு அல்லாஹ் அதை எடுத்துக் கொள்வான். பிறகு நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் உருவாகும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு கொடுங்கோல் ஆட்சி இருக்கும். அல்லாஹ் நாடும் வரை அது இருக்கும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பிறகு பலவந்தமான ஆட்சி ஏற்படும். பிறகு அல்லாஹ் அதையும் எடுத்துக் கொள்வான். பின்னர் நுபுவ்வத் வழியிலான கிலாஃபத் இருக்கும்."

நாம் மேலே கூறிய ஆதாரங்களை அனைத்தையும் படித்த பிறகு இந்த நபிமொழி எந்தவகை கிலாஃபத்தை பற்றி கூறுகின்றது என்பதை தெளிவாக அறிந்துகொள்ளலாம். அல்ஹம்துலில்லாஹ்...

மேலும், இந்த நபிமொழி ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில், அன்னாரின் இரண்டாவது வல்லமையாக தோன்றும் ஒவ்வொரு நபியின் இரண்டாவது வல்லமையின் நிலையை குறிக்கின்றது. அதாவது, அந்த நபியின் கிலாஃபத் மற்றும் உம்மத்தே முஹம்மதிய்யாவில் அடுத்த நபி தோன்றும் போது முந்திய நபியின் கிலாஃபத்தின் நிலையை குறிக்கின்றது. இதன் விளக்கத்தை இக்காலத்தில் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையில் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கு பிறகு இரண்டாவது நபியாக தோன்றியுள்ள ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

(காண்க:-http://www.jamaat-ul-sahihal islam.com/jusai_files/fs_29may09.htm)

ஒருவேலை இந்த நபிமொழி ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களுக்கு பிறகு தோன்றும் நபிமார்கள் அல்லாத கிலாஃபத்தே ரசூல்மார்களை குறிக்கும் என்றால், இது ஒரு தெளிவான இறுதிநபி கொள்கை மட்டுமல்லாமல் நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமைக்கு, இன்னும் கூறப்போனால் அன்னாரின் நிழல்களின், இன்னும் தெளிவாக கூறினால் அன்னார் மீண்டும் இந்த உலகத்திற்கு ஆன்மீக ரீதியாக வருவதை தடை போடும் மாபெரும் ஆபத்தான நிலையும் ஆகும்.

இவர்களின் மனோ இச்சையின் படி இவர்கள் கொடுக்கும் விளக்கம் ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் கூற்றிற்கு எதிரானது என்பதை மிக எளிமையாக புரிந்துகொள்ளலாம். குறிப்பாக இந்த நபிமொழியின் ஆரம்பத்தில் கிலாஃபத் எடுத்துக்கொள்ளப்பட்டது என்பதை எவ்வாறு ஒட்டுமொத்த கிலாஃபத் என்று எடுத்துக்கொள்ள முடியும்? ஏனென்றால், ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்கள் இந்த விளக்கத்தை கேட்டாலே தனது உடல் நடுங்குகின்றது என்கின்றார்கள். இன்னும் அன்னார் ஹஸ்ரத் மூசா (அலை) அவர்களின் கிலாஃபத் எவ்வாறு 1400 வருடங்களாக எந்த தடையும் அன்றி தொடர்ந்ததோ, அதே போல நபிமார்களுக்கு எல்லாம் இமாம் ஆன ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் கிலாஃபத் ஒருபோதும் எடுத்துக்கொள்ளபடவும் இல்லை , அன்னாரின் இரண்டாவது வல்லமையின் தொடர் அறுந்துவிடவும் இல்லை, என்பதே ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் நம்பிக்கையாகும். எனவே இப்போது இந்த நிஜாமிகளின் நிலையை உங்களால் அறிந்துகொள்ள முடியும் இன்ஷாஅல்லாஹ்.

மாறாக இந்த நூற்றாண்டில் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் கிலாபத்தில் 14 வது கலீஃபாவாக தோன்றிய இறைத்தூதர் ஹஸ்ரத் முஹையுதீன் அல் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் இந்த நபிமொழி, நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் ஒரு நுபுவத்திற்கும் அடுத்த நுபுவத்திற்கும் இடையே கலீஃபத்துல் ரசூல் கிலாஃபத்தின் நிலை பற்றி கூறுகின்றது. இன்னும் குறிப்பாக கூறுவதென்றால், இந்த நபிமொழியில் எந்த ஒரு கால அளவையும் குறிப்பதில்லை.

மேலும், இந்த நபிமொழி தொடரக் கூடியதுமாகவும், இன்னும் இந்த நபிமொழியை ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களுக்கும் இடைப்பட்ட கிலாஃபத்தே ரசூல்களின் நிலை எவ்வாறு இருந்தது என்று பார்த்தோமேயானால், நபி (ஸல்) அவர்களின் நுபுவ்வத்து அல்லாஹ் நாடியவரை அதாவது அன்னாரின் முதலாவது வல்லமைக்கு பிறகு, அதாவது அன்னாருக்கு பிறகு அல்லாஹ் கிலாஃபத்தை, கிலாஃபத்தே ரசூல் ஹஸ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்களின் வடிவில் ஏற்படுத்தினான். பிறகு இந்த கிலாஃபத்தே ரசூல்களின் காலம் 30 ஆண்டுகளில் எடுத்து கொள்ளப்பட்டது. இந்த இடத்தில் ஒரு விசயத்தை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். அதாவது ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் நுபுவ்வத் ஒரு பூர்த்தியடைந்த ஷரீஅத்தின் நுபுவத்தாகும், எனவே அன்னாரின் கிலாஃபத் ஒருபோதும் தடை படுவதோ அல்லது எடுத்துக்கொள்ளப்படுவதோ இல்லை. மாறாக அது ஒரு நிலையில் இருந்து மற்றுமொரு நிலையாக (கலீஃபத்துல்லாஹ்களாக) தான் இருந்தது. அல்ஹம்துலில்லாஹ் .

எனவே, இந்த நபிமொழி படி அல்லாஹ் அன்னாரிடம் இருந்து எடுத்துக் கொண்டது முழு கிலாஃபத்தை அல்ல, மாறாக எடுத்துக்கொள்ளப்பட்டது கிலாஃபத்தே ரசூல் வடிவிலான கிலாஃபத்தைத்தான், ஆனால் அன்னாரின் நுபவத்தின் கிலாஃபத் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இறைவனின் அருளாக தோன்றிய முஜத்தித்துகளின் மூலம் தொடர்ந்துகொண்டு தான் இருந்தது என்பதை இங்கே நாம் அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இன்னும் உம்மத்தே முஹம்மதிய்யாவில் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களுக்கும் இடையில் நபி என்ற அந்தஸ்தை ஹஸ்ரத் காத்தமுன் நபீய்யின் (ஸல்) அவர்களின் ஒப்பற்ற பதவியை நிலைநிறுத்த அல்லாஹ் சுபஹான ஹுதாலா எந்த முஜத்தித்துக்கும் வழங்கவில்லை, எனவே நேர்வழியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட கிலாஃபத்தே ரஸூலுக்கு பிறகு பெயர் தாங்கிய கிலாஃபத் அடுத்த நுபுவத்தான ஹஸ்ரத் மஸீஹ் (அலை) வரை தொடர்ந்தது

இந்த நபிமொழி, மிகத்தெளிவாக நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் ஒரு நுபுவத்திற்கும் மற்றும் அந்த நுபுவ்வத் தோன்றும் போது கிலாஃபத்தே ரஸூலின் நிலையை முன்னறிவிக்கின்றது, இன்னும் கூறப்போனால் ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் காலத்தில் கூட இந்த கிலாஃபத்தின் அதாவது கிலாஃபத்தே ரஸூல் கலீஃபாவாக அப்துல் ஹமீது-II அவர்கள் இருந்தார். இந்த காலகட்டம் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பிறகு ஒரு மிக நீண்ட நீட்சியாக இருந்துள்ளது என்று ஹஸ்ரத் முஸ்லீஹ் மவூது (ரலி) அவர்களும் உறுதி செய்கின்றார்கள், அல்ஹம்துலில்லாஹ் .

பிறகு, ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவர்களின் இரண்டாவது வல்லமையாக அவருக்கு பின் தோன்றிய அதாவது, கலீஃபத்துல் ரஸூல்களான கலீஃபத்துல் மஸீஹ்மார்களின் கிலாஃபத் ஏற்பட்டது என்பதே இந்த அருளுக்குரிய நபிமொழியாகும். இன்னும், இந்த நிஜாமிகள் கட்டவிழ்க்கும் மற்றுமொரு சுயவிளக்கம் இந்த நபிமொழிக்கு பிறகு நபி(ஸல்) அவர்கள் அமைதியாகி விட்டார்கள். எனவே, இதற்கு பிறகு இந்த கிலாஃபத்தான் தொடரும் என்ற கற்பனையை அப்பாவி மக்களிடையே பரப்புகின்றனர். மாறாக பெருமானார் (ஸல்) அவர்கள் இது ஒரு முடிவல்ல தொடர் என்பதையே இந்த நபிமொழியில் உணர்த்துகின்றார்கள். இந்த நிஜாமிகளின் கூற்றை போல் அன்னார் ஒருபோதும் இறுதி நபிக்கொள்கையை போதிக்கவில்லை (நஊதுபில்லாஹி மின் தாலிக்)

இக்கூற்றை இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள அல்லாஹ் தனது இறைவேதத்தில் இவ்வாறு கூறுகின்றான்:-

அல்லாஹ் மேகத்திலிருந்து தண்ணீரை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கின்றான். பின்னர் அவன் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட புற்பூண்டை வெளிப்படுத்துகின்றான். பிறகு அது உலர்ந்து விடுகிறது. பின்னர் அது மஞ்சள் நிறமாவதை நீர் காண்கின்றீர். பின்னர் அவன் அதனைப் பதராக ஆக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நற்போதனை இருக்கிறது. (திருக்குர்ஆன் 39: 22 )

இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் கூறுகின்ற பொருள் என்னவென்றால், பூமியானது ஆன்மீக ரீதியாக வறட்சியடைந்து விடும்போது, இறைவன் இறை வஹீயின் வடிவத்தில் மழையை இறக்குகிறான். பின்னர் அந்த பூமியானது ஒரு புதிய வாழ்க்கையைப்பெற்று, பல்வேறு நிறங்களையும், சுவைகளையும், தனித்துவ குணங்களையும் கொண்ட பூக்களும், பழங்களும், வளர்ச்சியடைகின்றன.

அதாவது, ஓர் ஆன்மீக சீர்திருத்தவாதி, முஜத்தித் தோன்றுகின்றபோது, நற்குணம் கொண்ட மற்றும் இறைவனுக்கு அஞ்சுகின்ற மனிதர்களின் சமூகம் பிறக்கின்றது, மேலும் பயபக்தியுள்ள மற்றும் கற்றறிந்த ‘உலமா’ அதாவது மார்க்க அறிஞர்களுக்குக்கூட இறைவனுடைய வார்த்தையை அவர் கற்பிக்கின்றார். பிறகு ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டு அதனால் இறைவனுடைய வார்த்தை மறக்கப்பட்டும், அவனுடைய கட்டளைகள் மீறப்பட்டும், கீழ்ப்படியாமையும் உருவாகி விடுகின்றது. மீண்டும், பூமியானது வறண்டு, காய்ந்துபோய், ஒரு நெருப்பில் எறியப்படுவதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கக்கூடிய உலர்ந்த எரிபொருளைப் போன்ற தீய மனிதர்களின் ஒரு தலைமுறையானது மீண்டும் பிறந்து, நல்ல மனிதர்களின் இடத்தைப் பிடித்துக்கொள்கின்றது. இவ்வாறாக இந்த சுழற்சி செல்கின்றது. அதாவது மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றது

இறைவன் மிகத்தெளிவாக ஆன்மீக வறட்சி ஏற்படும்போது, அவன் தனது அருள் மழையை வஹீயின் மூலம் தனது ஆன்மீக சீர்த்திருத்தவாதியின் மீது இறக்கி மீண்டும் பூமியில் ஆன்மீக வசந்த காலத்தை உருவாக்குகின்றான். சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் இந்த நிகழ்வு ஏற்படுகின்றது அதாவது இது ஒரு சுழற்சியாகும். மேலும், இந்த இடத்தில் அல்லாஹ் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ஏனென்றால் இது ஒரு சுழற்சியாகும்.

இதே நிகழ்வு தான் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் கிலாஃபத்தே ரஸூலின் காலத்தை பற்றி கூறும்போது, ஒரு நபிக்கும் அவருக்கு பின் தோன்றும் நபிக்கும் இடையில் இந்த கிலாஃபத்தே ரஸூலின் நிலையை பற்றி முஸ்னத் அஹ்மத்தில் தொகுக்கப்பட்ட ஹதீஸீல் அன்னார் மௌனமாகிவிட்டார் என்று வருகின்றது. ஏனென்றால் இதுவும் ஒரு சுழற்சியாகும். இந்த நபிமொழி, நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் தோன்றும் ஒவ்வொரு நுபுவத்திற்கும் நிகழக் கூடியதாகும்.

மேலும், இந்த நபிமொழியின் உண்மை வடிவமே இந்த நூற்றாண்டில் அல்லாஹ்வின் பெரும் கருணையாக வெளிப்பட்டுள்ளது. அதாவது, இந்த நபிமொழி உம்மத்தே முஹ்மதிய்யாவில் தோன்றும் ஒருநபிக்கும் அடுத்து வரும் நபிக்கும் இடையிலான கிலாஃபத்தின் நிலையை குறிக்கிறது என்பதை தெளிவாக அறிந்து கொண்டோம்,

அவ்வாறில்லை என்றால் மற்ற பிரிவு முஸ்லிம்கள் போல் இறுதிநபி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதையும் தெரிந்துகொண்டாம்.

மேலும், ”எனக்கும் மஸீஹிக்கும் இடையே நபியில்லை” என்ற நபிமொழிக்கேற்ப நபி (ஸல்) அவர்களின் உம்மத்தில் மஸீஹ் மட்டுமே நபி என்ற அந்தஸ்தை பெறுகின்றார். இன்னும் மூஸா (அலை) அவர்களின் கிலாஃபத் மஸீஹ் உடன் முடிவடைந்து விட்டது, ஆனால் நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமை அதாவது கிலாஃபத் மறுமைவரை தொடரக்கூடியதாகும், எனவே அன்னாரின் உம்மத்தில் இறுதியாக தோன்றக்கூடிய கலீஃபாவான மஸீஹ் இருக்கின்றார், இந்த இடத்தில் மிக குறிப்பாக நாம் அறியவேண்டியது என்னவென்றால் உம்மத்தே முஹம்மதிய்யாவில் மஸீஹ் ஒருவர் என்றால் அது மூஸா (அலை) அவர்களின் கிலாஃபத்தை போல் முற்றுபெற்றுவிடும் ஆகையால், உம்மத்தே முஹம்மதிய்யாவில் மஸீஹ் என்ற வார்த்தையின் அர்த்தம் மஸீஹ் ஒருவரல்ல பலர் என்பதாகும், இன்னும் தெளிவாக கூறினால் உம்மத்தே முஹம்மதிய்யாவில் இறுதி கலீஃபா மஸீஹ்காக இருக்கின்றார். அவர் ஒருவர் அதாவது ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) மட்டும் தான் என்று கருதினால், நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமை, மூஸா (அலை) அவர்களின் இரண்டாவது வல்லமை போல் முற்றுபெற்றுவிடும்! மாறாக, வரக்கூடிய மஸீஹ் ஒருவர் அல்ல பலர் என்றால் நபி (ஸல்) அவர்களின் அருளுக்குறிய கிலாஃபத் தொடரக் கூடியதாகவும் மஸீஹ்மார்களின் வருகை முற்றுப்பெறவில்லை என்பதால், பகுதி அதாவது நிழல் நுபுவ்வத்தின் கதவு என்றென்றும் திறந்தே இருக்கும் சகோதரர்களே .

ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்கள் ஒருவரே மஸீஹ் அல்ல மாறாக அன்னார் நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையில் மஸீஹ் என்னும் நபிமார்களின் கதவை திறப்பதற்காக வந்துள்ள இஸ்லாத்தின் கலீஃபா ஆவார்கள். மேலும் அன்னார் ஒரு காத்தமுள் குலஃபாவும் ஆவார்கள். எனவே இனி நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையாக கியாமத்து வரை தோன்றும் மஸீஹ்மார்கள் அதாவது நபிமார்கள், அன்னாரை பின்பற்றாத ஏனைய பிரிவு முஸ்லிம்களில் இருந்து தோன்ற மாட்டார்கள். மாறாக, தோன்றக் கூடிய ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையான மஸீஹ், அன்னாரையும் அதாவது நபி(ஸல்) அவர்களையும், காத்தமுள் குலஃபாவும் மஸீஹ் மவூது (அலை) அவர்களையும் பின்பற்ற கூடியவர்களாக இருப்பார்கள் என்பதையே ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றார்கள்.

இப்போது மீண்டும் கிலாஃபத் சம்பந்தமான அந்த நபிமொழிக்கு வருவோம். மேலும் இந்த நபிமொழியில் காலத்தை குறிப்பிடப்படவில்லை என்பதை முன்னரே நாம் பார்த்தோம். எனவே, உம்மத்தே முஹம்மதிய்யாவில் தலைமை நபி காத்தமுன் நபிய்யீன் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கும், அவர்களுக்கு பிறகு அன்னாரின் இரண்டாவது வல்லமையின் அங்கமான காத்தமுள் குலஃபா ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களுக்கும் இடையில் இந்த நபிமொழியின் அடிப்படையில் கிலாஃபத்தே ரஸூலின் காலம் நேர்வழியில் தொடங்கி கொடுங்கோலில் முடிந்தது.

ஆனால், இப்போது முஹம்மதிய்யா கிலாஃபத்தின் நூற்றாண்டின் முஜத்தித் மஸீஹ்காக, அதாவது, நபி என்ற பட்டத்தை பெற்று மஸீஹ்கின் வாசலை அதாவது, ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையில் நுபுவ்வத்தின் அருளுக்குரிய வாசல் திறக்கப்படுகின்றது. நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையாக கிலாஃபத்தே முஹம்மதிய்யாவில் ஹஸ்ரத் மிர்சா குலாம் அஹ்மது (அலை) அவர்களின் நூற்றாண்டிற்கு பிறகு 15 வது நூற்றாண்டில் இறைவனின் ரூஹுல் குத்தூஸினால் பலப்படுத்தப்பட்டு ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் மறுமை வரை தொடரக்கூடிய இரண்டாவது வல்லமையில் தோன்றிய முஜத்தித் ஒரு மஸீஹ்க்காகவும் நபியாகவும் கிலாஃபத்தே முஹ்மதிய்யாவின் 15 வது கலீஃபாவாகவும் இறைவனின் அருளாக ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் தோன்றியுள்ளார்கள்.

எனவே, ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கும் அதாவது 14வது நூற்றாண்டின் முஜத்தித்துக்கும் 15வது நூற்றாண்டின் முஜத்தித் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கும் இடைப்பட்ட காலம் ஒரு நூற்றாண்டாகும். அதாவது நபி (ஸல்) அவர்களின் இரண்டாவது வல்லமையில் இரண்டு நபிமார்கள் அடுத்தடுத்த நுற்றாண்டில் தோன்றியுள்ளார்கள். இன்ஷாஅல்லா, இதற்கு பின் அடுத்த நூற்றாண்டுகளிலும் தோன்றுவார்கள். ஆக இந்த நபிமொழியின் அடிப்படையில் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் இரண்டாவது வல்லமையான கிலாஃபத்தே ரஸூலின் காலம் நேர்வழியிலிருந்து வழிகேட்டின் காலமாகும்.

உடனே, அஹ்மதிய்யா மௌவ்லவிகள் எங்களைப் பார்த்து ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம் 3வது மற்றும் 4வது கலீஃபாவிற்கு எதிரானவர்கள் என்று அப்பாவி மக்களை இந்த உண்மையின் பக்கம் சிந்திக்காதவாறு திசைதிருப்புகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் கிலாஃபத்தே ரசூல் வடிவிலான கிலாஃபத் நேர்வழியில் இருப்பதும் அது வழிகேட்டின்பக்கம் செல்வதும், பின்பற்றும் மக்களின் ஆன்மீக நிலையை பொறுத்துதான் அமையும். இதை ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்களும் உறுதி செய்கின்றார்கள்.

ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் இந்த கிலாஃபத்தை பற்றி கூறும்போது:- கிலாஃபத்தின் இழப்பு என்பது எந்தவொரு கலீஃபாவின் குறைபாடுகளின் காரணமாக அல்ல. மாறாக ஒரு ஜமாஅத்தின் குறைபாடுகள் காரணமாகவேயாகும். மேலும் கிலாஃபத்தின் இழப்பு என்பது ஒரு கலீஃபாவின் பாவத்தை நிரூபிப்பதாகவும் இல்லை. மாறாக ஒரு ஜமாஅத்தின் பாவத்திற்கு சான்றாகவே அமைந்துள்ளது. ஏனென்றால் இது எல்லாம்வல்ல அல்லாஹ்வின் தெளிவான வாக்குறுதியாகும். அதாவது பெரும்பான்மையான மக்கள் நம்பிக்கை மற்றும் நற்செயல்களின் பாதையில் நிலைத்திருக்கும் போதுதான், அவன் கிலாஃபத் என்பதை தொடரச் செய்வான். மேலும் அவர்களிடம் மாறுதல் ஏற்பட்டு பெரும்பாலான மக்கள் ஈமான் மற்றும் நற்செயல்களின் பாதையிலிருந்து விலகிச் செல்லும் பட்சத்தில் எல்லாம்வல்ல அல்லாஹ், “நீங்கள் தீயச்செயல்களை செய்பவர்களாக ஆகிவிட்டீர்கள், எனவே நான் எனது அருட்கொடைகளை உங்களிடமிருந்து விலக்கிக் கொள்கின்றேன்”; என்று கூறுவான். இறைவன் விரும்பினால் அவன் ஒரு கூடுதலான உதவியாக சில காலங்கள் வரைக்கூட ஒரு ஜமாஅத்தில் கலீஃபாக்களை ஏற்படுத்துவதை தொடரலாம்.

இந்த நபிமொழியில் கிலாஃபத்தின் முதல் காலகட்டத்தை, முஸ்லீம்கள் பொதுவாக புரிந்து கொள்வது தூய்மையாளர்களும், நேர்மையாளர்களுமான கலீஃபாக்களின் அதாவது கிலாஃபத்தே ராஷித் காலம் என்றாகும். அவ்வாறே வாக்களிக்கப்பட்ட மஸீஹின் காலத்திற்கு பிறகு, அஹ்மதியா ஜமாஅத்தில் கிலாஃபத் அமைப்பு உருவானது. ஜமாஅத்தின் கொள்கையை நடத்தி செல்ல கலீஃபத்துல் மஸீஹ்மார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அல்லாஹ் நாடியது வரையிலும் அது தொடர்ந்தது. பின்னர் அது வழிகேட்டின் பக்கம் செல்ல தொடங்கியது, இன்னும் குறிப்பாக இவர்கள் இப்பொழுது கொண்டுள்ள இவர்களின் கிலாஃபத்தின் மேல் உள்ள நம்பிக்கையால் இஸ்லாத்தின் போதனைகளும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் போதனைகளும் முதுகுக்குப்பின்னால் தூக்கி எறியப்பட்டுள்ளது. மேலும், அஹ்மதிகள் திருகுர்ஆன், நபிமொழி மற்றும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் போதனையைவிட கிலாஃபத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

இன்னும் கூறப்போனால், அவர்கள் எந்தளவிற்கு ஆகிவிட்டார்கள் என்றால், “கிலாஃபத் எங்கள் உயிர்” என்ற கோஷங்கள் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள் . எனவே அல்லாஹ் அவனது ஒளியை விலக்க ஆரம்பித்தான், அவனது கலீபஃத்துல்லாஹ்வாக இந்த எளியவனை (ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை)அவனது அருளாக எழுப்பினான்.

மேலும், இந்த எளியவன் எந்த மனித கரங்களாலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் ஸுபுஹானஹுதாலா, எனது எஜமானர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) மற்றும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் வேலையை தொடர்ந்து எடுத்துச்செல்ல அவனது அன்பிற்குரியவனாக நேரடியாக தேர்வு செய்துள்ளான். ஒரு கலீஃபத்துல்லாஹ்வின் வருகை நுபுவ்வத்தின் போதனையின் அடிப்படையிலானதாகும். மேலும், இங்கு நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், நுபுவ்வத் அந்த ஏக இறைவன் ஏற்படுத்தும் ஒரு மாபெரும் அருளேயன்றி எந்த மனிதனாலும் உருவாக்க முடியாது. மேலும் இவ்வாறு தோன்றும் கலீஃபதுல்லாஹ் முற்றிலும் இறைவனின் ஆணைப்படி அவனது வஹியின் மூலம் வழி நடத்தப்படுகின்றார், இவ்வாறு தன்னை அல்லாஹ்வின் கலீஃபா என்று வாதம் செய்யும் ஒருவரிடம் பையத்தை பெறாமல் தனது முகத்தை திருப்பிக்கொண்ட ஒருவர் நிச்சயமாக நாளை மறுமையில் அந்த ஏக இறைவனின் முன் நிறுத்தப்படுவார். அப்போது அவருக்கு நிராகரித்ததற்கான எந்த ஆதாரமும் இருக்காது, மேலும் அவ்வாறாக ஒரு கலீஃபதுல்லாஹ்வின் பைய்யத்தை முறித்து கொண்ட நிலையில் மரணிப்பவர் நிச்சயமாக அறியாமையின் மரணமான "ஜாஹிலியத்தின்" மரணத்தை அடைகின்றார். ஆக, இந்த மாபெரும் அருளின் பக்கம் சிந்தியுங்கள்! அன்பானவர்களே!

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.