அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Jul 8, 2014

தமக்கு ஞானம் இல்லை என்றால் ஹதீஸை பலகீனப்படுத்துவதா!?


இஸ்லாத்தில் சில பெயர்தாங்கி ஆலிம் பெருமக்கள் எந்த ஹதீஸ் தமக்கு தோதுவாக இருக்கிறதோ, எதுக்கு மட்டும் தம்மால் விளக்கம் அளிக்க முடியுமோ அதை உறுதியான ஹதீஸ் என்று கூறுகின்றார்கள். அதே சமயம் எந்த ஹதீஸிற்கு தம்மால் விளக்கம் கொடுக்க முடிவதில்லையோ அதை மிக எளிதாக பலகீனப்படுத்தியும் விடுகின்றார்கள். இந்த வரிசையில் பல ஹதீஸ்கள் இவர்களின் பார்வையில் உள்ளன..அதனை இந்த ஆலிம்கள் தனது சுய நலனை கருதி லயீஃப் அதாவது இந்த ஹதீஸ் பலகீனமானது என்று ஃபத்வா கொடுத்துவிடுகின்றார்கள். அதில் ஒன்றை நாம் கீழே காண்போம்:

ஒரு ஹதீஸ் இவ்வாறு வருகின்றது: 

2321 முஹம்மத் பின் ஸியாத் அல் அல்ஹானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூ உமாமா அல் பாஹிலீ (ரலி) அவர்கள், ஒரு வீட்டில் ஏர்கலப்பை யையும் மற்றும் சில விவசாயக் கருவிகளையும் கண்டார்கள். உடனே அவர்கள், இந்தக் கருவி ஒரு சமுதாயத்தினரின் வீட்டில் புகும் போது அந்த சமுதாய வீட்டில் அல்லாஹ் இழிவைப் புகச் செய்யாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸை சிலர் பலகீனமானது என்று கூறிவருகின்றனர். காரணம் இதற்குண்டான ஞானம் அவர்களுக்கு இல்லை. இதற்கு எவ்வாறு நாம் சுய விளக்கம் தருவது என்பதை அவர்களால் யூகித்து கூட பார்க்க முடியவில்லை. ஆகவேதான், இவ்வாறு தனது சுய சிந்தனைக்கு எட்டாத ஹதீஸ்களை இவர்கள் அந்த ஹதீஸ்கள் பலகீனமானது என்று ஃபத்வா கொடுத்து வருகின்றனர்.

இந்த ஹதீஸின் சனதிலும் எந்த பலகீனமும் இல்லை எனும் போதும், குர்ஆனிற்கு முரண்படுகிறதா என்று பார்த்தாலும் இல்லை. அது பலகீனமானது இல்லை எனும் போதும் இவர்கள் எந்த வகையில் பலகீனமானது என்று கூறுகின்றார்கள். ஆம் சிலர் ஒரு சில ஹதீஸ்களை வைத்து அதாவது ரசூல் (ஸல்) அவர்கள் விவசாயத்தை ஆதரித்து பல ஹதீஸ்கள் கூறியுள்ளார்கள் , அந்த ஹதீஸ்களெல்லாம் இந்த ஹதீஸிற்கு முரண்படுகிறது என்று கூறி இதனை பலகீனபடுத்துகின்றனர். இவர்களின் இந்த அளவுகோல் மிகவும் வியப்பிக்குறியதே. இந்த ஹதீஸை இவர்கள் அளக்கும் அளவுகோல் தவறானதே. இந்த ஹதீஸ் அனைத்து ரீதியிலும் நம்ப தகுந்த ஹதீஸாகவே இருக்கின்றது. அப்படி என்றால் இந்த ஹதீஸிற்கான விளக்கம்தான் என்ன? என்ற கேள்விக்கான பதிலை கீழே பார்போம்:

இந்த ஹதீஸின் விளக்கம்:

இந்த ஹதீஸின் விளக்கம் என்னவென்றால், எந்த சமுதாயத்தில் இந்த விவசாய கருவிகள் இருந்து வருகிறதோ அதாவது தொடர்ந்து அவர்கள் விவசாயியாகவே இருந்து வருகின்றார்களோ அந்த சமுதாயம் வளர்ச்சி பெருவதில்லை, அவர்கள் ஆட்சி செய்யப்படுபவர்களால்  அடக்குமுறைக்கு ஆளாகிவிடுகின்றனர். ஒரு பக்கம் பலனின் அடிப்படையில் இந்த விவசாய வேலை அருளுக்குரியதாக இருக்கிறது. மறுபக்கம் தீய முடிவின் அடிப்படையில் கொடியதாக இருக்கிறது. ஹஸ்ரத் ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூற்றின் கருத்து என்னவென்றால், தற்போது வரை விவசாயிகள் அனைத்து நாட்டிலும் அங்குள்ள ஆட்சி அதிகாரிகளின் அடிமைக்குட்பட்டு இருந்து வருகின்றனர். விவாசியிகள் மீது செய்யும் கொடுமையின் காரணத்தினால்தான் கம்யூனிசம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தது. இதன் காரணமாக 1779 இல் ஃபிரான்ஸ் விவசாயிகள் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்கள். இவர்கள் தாங்கள் பயிர் செய்த நிலத்தை பெறுவதற்காக ஆட்சி அதிகாரிகளுக்கெதிராக வாளை உபயோகித்தார்கள். இறுதி முடிவு அவர்களுக்கு நேர் எதிராகவே அமைந்தது. அவர்கள் விடுதலை பெரும் சூழ்நிலையை முழுவதுமாக இழந்துவிட்டார்கள். 

சில விரிவுரையாளர்கள் ரசூல் (ஸல்) அவர்களின் இந்த கூற்றுக்கு இவ்வாறு விளக்கம் அளித்துள்ளனர் அதாவது, " இரவும் பகலுமாக ஒரு சமுதாயம் விவசாயத்திலேயே மூழ்கிவிட்டாலோ மேலும் போர் கலை அறிவதிலிருந்து விலகியவர்களாக இருந்தாலோ இறுதியாக அவர்கள் (அந்த சமுதாயம்) அடக்குமுறைக்கு ஆளாகிவிடுகின்றனர். இவ்வாறு அவர்களுக்கு இழிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றன. (ஃபத்ஹுல் பாரி பாகம் 5 பக்கம் 8)

ஆக இந்த ஹதீஸிற்கு இவ்வாறு விளக்கம் இருக்க, தனக்கு இந்த ஹதீஸிற்கு விளக்கம் தெரியவில்லையே என்ற ஒரே காரணத்திற்காக ஒரு சப்பை கட்டை கட்டி இதனை பலகீனப்படுத்துவது இவர்களின் சுய நலனையே காட்டுகிறது, இவர்கள் தனது சுய நலத்தின் அடிப்படையை கொண்டே தனது பிழைப்பை நடத்துகின்றனர் , நடத்திவருகின்றனர் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இருக்கிறது என்றும், இருப்பதை இல்லை என்றும் தனது மன இச்சை படி மார்க்கத்தோடு விளையாடி வருகின்றனர் என்பதும் இவர்களின் இந்த செயலின் மூலம் தெரியவருகின்றது.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.