அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Nov 5, 2011

இஸ்மி மௌலானாவின் கலப்பட மார்க்கம்



ஜிஹாதும் அஹ்மதிய்யா ஜமாத்தும்

இஸ்மி ஏட்டின் அக்டோபர் இதழில் அதன் ஆசிரியர் அஹ்மதியா இயக்கத்திற்கும், அதன் தூய ஸ்தாபகர் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கும் எதிரான தமது காழ்ப்புணர்ச்சியை வெளியிட்டு பின்வருமாறு எழுதுகிறார்.

'ஆங்கிலேயர் விருப்பப்படி மிர்ஸா குலாம் இரண்டு காரியங்களை செய்தார். ஒன்று புனிதப் போர் என்ற பெயரில் மிக்க அலங்காரமான வார்த்தைக் கோவைகளை அமைத்து முஸ்லிம்களை தன்பக்கம் ஈர்த்தார். இரண்டாவது ஆங்கிலேய அரசுக்கு எதிராக முஸ்லிம்கள் ஆயுதம் எடுக்காமல் இருக்கவேண்டும் என்று போதித்தார். இத்துடன் ஆட்சியில் இருப்பவர்களுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் என்று திருக்குரானில் இருந்து ஆதாரம் காட்டி மக்களை மடக்கினார். (பக்கம் 11)......... திருக்குரானில் வரும் ஜிஹாத் என்ற வார்த்தைக்கு ஆங்கிலேயருக்கு சாதகமாக விளக்கம் எழுதினார். "அந்த வார்த்தைக்குப் புனிதப் போர் என்பது பொருளல்ல. மக்களுக்கு இஸ்லாத்தைப் போதிப்பது மட்டும் குறிக்கும் என்றார்'. 

மௌலான கூறியிருக்கும் வசனங்களில் பின்வரும் விஷயங்கள் அடங்கியிருக்கும்.

ஆங்கிலேயர்கள் விருப்பப்படி, ஜிஹாத் என்ற புனிதப் போருக்கு அரசாங்கத்திற்கு எதிராக வாளெடுத்துப் போரிடுதல் என்ற விளக்கத்திற்குப் பதிலாக மக்களுக்கு இஸ்லாத்தைப் போதித்தல் என்று அஹ்மதிகள் பொருள் கொள்கின்றனர்.

ஆட்சியில் இருப்பவர்களுக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்று திருக்குரானில் இருந்து ஆதாரம் காட்டி மடக்கினார்கள்.

இந்த இரண்டு விஷயங்களையும் திருக்குரான், ஹதீஸ் அடிப்படையில் என்ன விளக்க நாடுகிறேன்.

'ஜிஹாத்' என்ற சொல், ஒருவன் தன சக்திகள் அனைத்தையும் திரட்டி முழு மூச்சாக ஒன்றில் ஈடுபடுவதைக் குறிக்கும்' (தாஜுல் உரூஸ்)

மூன்று வகையான 'ஜிஹாத்' இருப்பதாக திருக்குர்ஆன் திருநபி மொழிகளிலிருந்து தெரியவருகிறது. அவை,

தற்காப்பிற்காக போரிடுவது.

தீய சக்திகளை எதிர்த்துப் போரிடுவது.

மன இச்சைகளை அடக்குவது (முஹாஷபதுள் குலூப் பக்கம் 14)

ஒரு முறை தபூக் என்னும் போர்களத்திலிருந்து மீண்ட சஹாபாப் பெருமக்களை நோக்கி பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

"நீங்கள் இப்போது ஒரு சிறு ஜிஹாத் (ஜிஹாதே அஸ்கர்) செய்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள்; இனி நீங்கள் 'பெரிய ஜிஹாத்' (ஜிஹாதே அக்பர்) ஈடுபடவேண்டும். பெரிய ஜிஹாத் என்னவென்று கேட்கப்பட்டதற்கு, மன இச்சைகளுடன் போராடுவதே பெரிய ஜிஹாத் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்'. (முஹாஷபதுல் குலூப் பக்கம் 213)

ஜிஹாத் மூன்று வகைப்படும் என்று திருக்குரானும் நமக்கு தெரிவிக்கிறது.

ஜிஹாதே அக்பர் - மிகப் பெரிய ஜிஹாத்

ஜிஹாதே கபீர் - பெரிய ஜிஹாத்

ஜிஹாதே அஸ்கர் அல்லது ஜிஹாதே ஷகிர் - சிறிய ஜிஹாத்

'ஜிஹாதே அக்பரைப்' பற்றி திருக்குரான் இவ்வாறு கூறுகிறது.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்கள் நப்சிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் நப்சை (மன இச்சையை) கட்டுப் படுத்தினால்தான் உங்களால் நேர்வழி பெற இயலும். (சூரா மாயிதா)

தனது மன இச்சையுடன் போராடி அதனை அடக்குபவரே உண்மையான போர்வீரராவார். (திருநபி மொழி - திர்மிதி)

'ஜிஹாதே கபீரைப்' பற்றி பின்வருமாறு திருக்குர்ஆன் கூறுகிறது 'நீர் நளினமாகவும் அழகான போதனைகளின் மூலமாகவும் (மக்களை) இறைவழியின் பக்கம் அழைப்பீராக! (சூரா நஹ்ல்)

மேலும், 'வஜாஹித்ஹும் பிஹி ஜிதாதன் கபீரா' 'நீங்கள் திருக்குர்ஆன் மூலம் 'பெரிய ஜிஹாத்' (ஜிஹாதே கபீர்) செய்வீர்களாக'

என்றும் திருக்குர்ஆன் நமக்கு கட்டளையிடுகிறது.

'ஜிஹாதே அஸ்கர்' என்பதுதான் இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக செய்யப்படும் தற்காப்புப் போர். இதனைப் பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

யார் மீது போர் தொடுக்கப்பட்டுள்ளதோ அவர்களுக்கு போர் செய்ய அனுமதி தரப்பட்டிருக்கிறது. ஏனென்றால் அவர்கள் அநீதிக்கும், கொடுமைக்கும் ஆளானவர்கள். அத்தகையவர்களுக்கு உதவி புரிய இறைவன் வல்லமையுள்ளவனாக இருக்கின்றான். அவர்கள் அநியாயமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு துரத்தப்பட்டவர்கள் 'எங்கள் இறைவன் அல்லாஹ்வே' என்று கூறியதே இவர்கள் செய்த குற்றம். இவ்வாறு இறைவன் சிலரை வேறு சிலரைக் கொண்டு தடுக்காமலிருந்திருந்தால், இறைவனின் திருநாமம் பெருமளவும் நினைக்கப்படும் யூத, கிறிஸ்தவ ஆலயங்களும், முஸ்லிம் பள்ளிவாசல்களும் அழிக்கப்பட்டிருக்கும்.(22:40)

ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

'வாளேந்திப் போர் செய்வதற்கான எந்தக் காரணமும் இப்போது இல்லை. மார்க்கத்தின் பெயரால், 'ஜிஹாத்! ஜிஹாத்!' என்று கூறி அனாவசியமாகப் போர் செய்வதற்கோ, இஸ்லாத்தை நிராகரிப்பவர்களுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கோ இஸ்லாம் அனுமதி தரவில்லை, சமாதானம் நிலைத்திருக்கும் காலத்தில், மார்க்கத்தின் பெயரால் அனாவசியமாகப் போர் செயவதுக் கூடாது என்றே இறைவன் கூறியிருக்கின்றான். (துஹ்பே கோல்டவிய்யா பக்கம் 34)

திருக்குர்ஆன், திருநபி மொழிகளின் ஆகியவற்றின் போதனைகளின் அடிப்படையில் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் ஜிஹாதிற்கு கூறிய விளக்கத்தை வைத்துதான் 'திருக்குரானில் வரும் ஜிஹாத் என்ற வார்த்தைக்கு அங்கிலேயருக்குச் சாதகமாக விளக்கம் எழுதினார்' என்று கூறி 'இஸ்மி'யின் மௌலான குழப்பம் விளைவிக்க எண்ணுகிறார்.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக புனிதப் போர் என்ற பெயரில் முஸ்லிம்கள் வாளெடுத்து யுத்தம் செய்யக்கூடாது, என்று அன்றைய இஸ்லாமிய மார்க்க அறிஞ்சர்கள் பலரும் முப்திகளும் செய்த அறிக்கைகளிலிருந்தும், மார்க்க தீர்ப்புகளிலிருந்தும் (பத்வா) சிலவற்றை கடந்த கட்டுரையில் எழுதியிருந்தேன் அதில், இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராக கிளர்சிகளில் ஈடுபடுவது ஹராம் (விலக்கப்பட்டது) என்று கூட மௌலானாவின் மத குரு ஒருவர் பத்வா கொடுத்திருந்தார். (இஷா அத்து சுன்னா பாகம் 6, பக்கம் 10)

ஹஸ்ரத் இமாம் மஹ்தி(அலை) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

அவர்கள் நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ அவ்வாறே நடந்து கொள்ள வேண்டும். என்று திருக்குரான் கட்டளையிட்டிருக்கிறது. எதுவரை அவர்கள் நமக்கெதிராக வாள் எடுப்பதில்லையோ, அதுவரை நாமும் அவர்களுக்கெதிராக வாள் எடுக்கக்கூடாது. (ஹக்கீகத்துல் மஹ்தி)

இக்காலத்தில் செய்யவேண்டிய புனிதப் போர் என்னவென்பதைப் பற்றி ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

'இஸ்லாத்தின் போதனைகளை சமாதான வழியில் உலகெங்கும் பரவச் செய்வதுதான் இந்த காலத்தில் நாம் செய்யவேண்டிய புனிதப் போர். இஸ்லாத்திற்கெதிராக செய்யப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவேண்டும். புனித இஸ்லாத்தின் மகத்துவங்களை உலகெங்கும் பரவச்செய்ய வேண்டும். அண்ணலார்(ஸல்) அவர்களின் உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டவேண்டும். அல்லாஹ் நமக்கு வேறொரு வழிகாட்டி தருவது வரை நாம் செய்ய வேண்டிய ஜிஹாத் இதுவேயாகும். (மக்தூப் பக்கம் 66)

அஹ்மதியா ஜமாஅத் கடந்த நூறு வருடங்களாக உலகெங்கும் இப்புனிதப் போரில் ஈடுபட்டு கோடிக் கணக்கான மக்களின் உள்ளங்களை வென்று இஸ்லாத்தின் பக்கம் கொண்டுவந்திருக்கிறது.

ஆனால் இஸ்மியின் மௌலானாவைப் போன்றவர்கள் ஏற்கனவே முஸ்லிம்களாக இருப்பவர்களைக் காபிர்களாக்குவதில்தான் கவனமும், வேகமும் காட்டுகிறார்களேயொழிய உலகில் இஸ்லாத்தைப் பரவச் செய்ய அவர்களால் இயலாது ஏனென்றால் அதற்குப் பல தியாகங்கள் செய்ய வேண்டும். இவர்களுக்குத்தான் கத்தம், ராத்தீபு, மௌலூது, கந்தூரி போன்ற பித்அத்துகளைச் செய்வதற்கே நேரம் போதாதே! முஷ்ரிக்கீன்களின் ஆசாரங்களை அப்படியே பின்பற்றி நடப்பதற்கு பொழுது போதாதே! இதில் இந்தக் குழப்பவாதிகளுக்கு இஸ்லாத்தைப் பற்றி சிந்திப்பதற்கு நேரமேது?

பாகிஸ்தான் அரசு அங்கு வாழும் எழுபதுலட்சம் அஹ்மதிகளை முஸ்லிம் அல்லாதவர்கள் என்று அறிவித்ததைக் கண்டு ஆனந்தக் கூத்தாடும் மௌலான அதே நிலை இந்தியாவிலும் குறிப்பாக தமிழ் நாட்டிலும் உருவாக்க வேண்டுமென்று மனப்பால் குடிக்கிறார். ஆனால் அஹ்மதிகளை காபிர் பத்வா கொடுத்தவர்களின் நிலைமையை ஆசிரியர் சிந்திக்க தவறிவிட்டார். 'ராபிதத்துல் ஆலமீன் இஸ்லாம்' என்ற அமைப்பு அஹ்மதிகளை முஸ்லிமல்லாதவர் என அறிவிக்க காரணமாயிருந்த மன்னர் பைசலுககு நேர்ந்த கதியென்ன? 1974 ஆம் ஆண்டு அஹ்மதிகளை முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் என சட்டம் இயற்றிய அதிபர் பூட்டோவிற்கு நேர்ந்த கதி என்ன? அஹ்மதிகளின் அடிப்படை உரிமைகளை பறித்த ஜியா உல் ஹக் நேர்ந்த கதி என்ன? இவற்றையெல்லாம் இவர் எண்ணிப் பார்க்கவில்லை.

அஹ்மதிகளுக்கு எதிராக செயல்பட்ட இத்தகையோருக்கு இறைவன் வழங்கிய தீர்ப்பு என்ன? மன்னர் பைசல் தனது சொந்த மருமகனாலேயே கொலையுண்டதும் உலகத் தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சித்தும் காப்பாற்றஇயலாமற் போய் அதிபர் பூட்டோ தூக்கிலிடப்பட்டதும் எளிதில் மறக்கக் கூடியவையா? அஹ்மதிகளின் அடிப்படை உரிமைகளை பறித்த ஜியாவுல் ஹக் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்ததும் மறக்கமுடியுமா? அஹ்மதிகளுக்கு எதிராக இவர்கள் அளித்த தீர்ப்பு சரியானது என்றால் இவர்களுக்கு அவமானகரமான அகால மரணம் ஏன் ஏற்பட்டது?

அடுத்து இஸ்மியின் ஆசிர்வாதத்துடன் மௌலான அஹ்மதிகள் மீது செய்திருக்கும் குற்றச்சாட்டு(?)

'ஆட்சியில் இருப்பவர்களுக்கு கீழ்படிந்து நடக்கவேண்டும் என்று திருக்குரானில் இருந்து ஆதாரம் காட்டி மக்களை மடக்கினார்? என்பதாகும் (பக்கம் 11)

'நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதர்(ஸல்) அவர்களையும், உங்களுடைய ஆட்சியாளர்களையும் அனுசரித்து நடப்பீர்களாக!" என்று திருமறை தெளிவாகப் போதிக்கிறது. இறைவனின் இந்த போதனைகளின் படி கடந்த ஒரு நூற்றாண்டுகாலமாக எந்தவிதமான கிளர்ச்சிகளிலோ, போராட்டங்களிலோ, அரசாங்கத்திற்கு எதிரான பணிகளிலோ ஈடுபடாமல் அமைதியோடும், சமாதானத்தோடும் அஹ்மதியா இயக்கம் செயல்பட்டு வருகிறது. உலகில் உள்ள எந்த அரசாங்கதிற்கும், எந்தத் தொந்தரவும்கொடுக்காமல், இஸ்லாமிய பிரச்சாரம் ஒன்றையே தனது ஒரே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றி வருகிறது. அஹ்மதியா ஜமாத்தின் இந்தச் சமாதானக் கொள்கை மௌலானாவிற்கும், இஸ்மிக்கும் பிடிக்கவில்லை போலும்!

ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.

'எந்த ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் அமைதியாகவும், சமாதானத்தோடும், சுதந்திரமாகவும் தங்கள் கடமைகளை நிறைவேற்றிவருகிறார்களோ நன்மையையும், நேரான மார்க்கத்தையும் பரவச் செய்வதில் அவர்களுக்கு எந்தத்தடையும் இல்லையோ அந்த ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியோ, போராட்டமோ செய்யக் கூடாது என்பது இஸ்லாமிய ஷரியத்தின் கட்டளை என்பது எல்லா முஸ்லிம்களும் ஒப்புக்கொள்ளும் ஒன்றாகும்.
(தப்லீக்கே ரிசாலத் பாகம் 1)

சரியத்தின் இந்தக் கட்டளைப்படி அஹ்மதிகள் தாங்கள் வாழும் நாட்டில் ஆட்சிக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்றுக் கூறுவது அஹ்மதிகளைக் காபிர்களாக்குவதற்குரிய காரணங்களில் ஒன்றாக தெரிகிறது மௌலானாவிற்கு!

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.