அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....  கன்னியாகுமரியில் முதல் நபராக அஹ்மதியா முஸ்லிம் ஜமாத்தில் இணைந்தேன்.இங்கு இடம்பெறும் கட்டுரைகளுக்கு அஹ்மதிய்யா ஜமாஅத் பொறுப்பு அல்ல. 

Sep 30, 2011

ஈசா(அலை) அவர்களின் மரணமும் அந்-நஜாத் ஏட்டின் மூடநம்பிக்கையும்.

திருக்குர்ஆன் ஹதீஸ் ஆதாரமின்றி மார்க்க விஷயத்தில் மனித அபிப்ராயம் எதையும் நம்ப மாட்டோம் என கொட்டி முழக்கி வருபவர்கள் நஜாத் குழுவினர்.

ஆனால் ஈசா நபி உயிருடன் இன்று வரை வாழ்ந்த கொண்டிருக்கிறார்கள் என்று ஏனைய மூட முல்லாக்கள் நம்புவது போன்றே இவர்களும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கு திருக்குரானிலும் ஆதாரமில்லை. ஹதீஸிலும் ஆதாரமில்லை. இது முழுக்க முழுக்க மனித அபிப்ராயமே!

திருக்குர்ஆன், ஹதீஸ் ஆதாரமின்றி மார்க்க விஷயத்தில் எதையும் ஏற்றதில்லை, ஏற்க்கவும் மாட்டோம் என நஜாத் குழுவினர் கூறுவது உண்மை என்றால்.

  1. ஈசா நபி ஈராயிரம் ஆண்டுகளாக உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு திருக்குரானிலிருந்தும், நம்பகமான ஹதீஸில் இருந்தும் ஆதாரம் தர வேண்டும்.
  2. ஈசா நபி உடலோடு உயர்த்தப்பட்டார்கள் என்பதற்கு திருக்குரானில் இருந்தும், ஹதீஸில் இருந்தும் தெளிவான சான்று தர வேண்டும்.
  3. ஈசா நபி வானத்திலிருந்து மீண்டும் வருவார்கள் என்பதற்கு திருகுரானில் இருந்தும், ஹதீஸில் இருந்தும் ஆதாரம் தர வேண்டும்.

இப்படி பல முறை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் இவர்களைக் கேட்டு விட்டது. இவர்களின் இந்த நம்பிக்கைக்கு இவர்கள் ஆதாரம் காட்டவேயில்லை.

இதிலிருந்து, இவர்களும் மார்க்க விஷயத்தில் முன்னோர்களின் தவறான கருத்துகளைக் கண்மூடித்தனமாக ஏற்பவர்கள் மேலும் மூடநம்பிக்கைகளைக் கைக்கொள்பவர்கள் என்ற முடிவிற்கே நாம் வர வேண்டியுள்ளது.

இவர்களின் இந்த பலகீனத்தை மறைப்பதர்க்ககவும் அது அம்பலமாகிவிடாமல் தடுப்பதற்காகவும் அவ்வப்போது நஜாத் இதழில் அஹ்மதியா ஜமாத்தை சாடுவது உண்டு.

1991 ஏப்ரல், மே அந்-நஜாத் இதழில், 'விமர்சனங்கள் விளக்கங்கள்' பகுதியில் "ஈசா (அலை) அவர்கள் மரணிக்கவில்லை, ஆயினும் ஆயினும் அவர்களும் மரணிப்பவர்களே என்பதற்கு குரான், ஹதீஸ் அடிப்படையில் தெளிவு படுத்தி இருந்தோம்" என நஜாத் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இது அப்பட்டமான பொய்யாகும் .

ஈசா(அலை) அவர்கள் இறக்கவில்லை என்ற மூட நம்பிக்கைக்கு ஏனைய ஆலிம்கள் காட்டும் அந்த ஒரே திருக்குர்ஆன் வசனத்தைதான் ஐவரும் காட்டி இருந்தார். ஆனா, அந்த வசனம் இவர்களின் கூற்றுக்கு எந்த வகையில் ஆதாரமாகும் என்பதை இவர் தெளிவு படுத்தவே இல்லை.

திருக்குரானில் 4:159 ஆம் வசனத்தில் "பல் ரபா அவுல்லாஹு இலைஹி" என்றிப்பதை எடுத்துக் காட்டி, அது ஈசா நபி உயிருடன் இருப்பதற்கு ஆதாரமாகும் என்று இவர்கள் கூறுகின்றனர்.

இந்த இறை வசனத்தில், ஈசா நபி அவர்களை இறைவன் உயிருடனும், உடலுடனும் உயர்த்திக் கொண்டான் என்று எங்கே கூறப்பட்டிருக்கிறது? உண்மையில் இந்த இறை வசனத்திற்குரிய சரியான பொருள், அல்லாஹ், அவருக்கு தன்னிடம் உயர்வைக் கொடுத்தான், என்பதேயாகும்.

மேலும், அல்லாஹ் ஈசா நபியைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று அந்த வசனத்திற்கு பொருள் கொண்டாலும் அவ்வாறு அவர்கள் உயர்த்தப்படுவதற்கு முன் அவர்களின் மரணம் நிகழ்ந்து விட்டது என்பதைத் திருக்குர்ஆன் 3:56- ஆம் வசனம் உறுதிப் படுத்துகிறது. இதில், ஈசா நபி அவர்களை மரணிக்கச் செய்து தன்னளவில் உயர்த்துவதாகவே இறைவன் ஈசா நபியிடம் கூறி இருந்ததாகக் காணப்படுகிறது.

மேலும், இந்த இரு வசனங்களிலும் கூறப்பட்டுள்ள "உயர்த்துதல்" என்பது உயிருடனும், உடலுடனும் ஒருவரை உயர்த்துவதாகாது. மாறாக, அது ஆன்மீக உயர்வையே குறிக்கும்.

நற்செயல்கள் மனிதனை உயர்த்தும் எனத் திருக்குர்ஆன் 35:11 இல் காணப்படுகிறது.

"இறைவனின் கட்டளையால் சில வீடுகள் உயர்த்தப்படும் எனத் திருக்குர்ஆன் 24:37 இல் காணப்படுகிறது.

"இறைவனுக்காக உண்மையிலேயே தழ்மைக் குணத்தைக் கைக் கொள்பவரை அல்லாஹ் ஏழாம் வானத்திற்கு உயர்த்துகிறான்" என ஒரு ஹதீஸ் உள்ளது. (கன்சுல் உம்மால், பாகம் 2, பக்கம் 25)

நாம் ஒவ்வொரு தொழுகையிலும் இரண்டு சஜ்தாவிற்கு இடையில் கூறும் வர்பஹ்ணீ (என்னை உயர்த்துவாயாக) என்ற துவா ஆன்மீக உயர்வையே குறிக்கும்.

இறைவன் திருக்குரானில் இத்ரீஸ் நபியைப்பற்றி கூறும்போது "வரபஹ்னாஹு மக்கானன் அளிய்யா" "நாம் இத்ரீஸ் நபியை மிக உயர்ந்த இடத்திற்கு உயர்த்தினோம்"

ஈசா நபிக்கு பயன்படுத்திய வினை சொல்லான 'ரபா ஆ' என்ற சொல்தான் இத்ரீஸ் நபிக்கும் அல்லாஹ் திருக்குரானில் பயன்படுத்தியுள்ளான். இந்த முல்லாக்கள் எந்த சொல்லின் அடிப்படையில் ஈசா நபி வானத்தில் உயிருடன் இருக்கிறார்கள் என்று நம்புகிறார்களோ அதே சொல்லின் அடிப்படையில் இத்ரீஸ் நபியும் வானத்தில் உயிருடன் இருக்கிறார்கள் என்று நம்ப வேண்டும். இந்த மூட முல்லாக்கள் நம்புவார்களா?

இவற்றிலிருந்து உயர்த்துதல் என்பது மார்க்க மரபுப்படி ஆன்மீக உயர்வையே குறிக்கும் எனத் தெளிவாக புலனாகிறது.

ஆனால் இந்த முல்லாக்கள் உண்மையை மறைத்து மக்களை குழப்புவதையே தனது தொழிலாக கொண்டுள்ளனர். அஹ்மதிகளை நயவஞ்சகர்கள் என்றும், வழிகேடர்கள் என்றும் குறிப்பிடுவதை தனது வாடிக்கையாகக் கொண்டிருந்ததுமல்லாமல் அவர் குறிப்பிட்டுள்ள அந்-நஜாத் நவம்பர் இதழில் எழுதுகிறார்:-

"உலகத்தில் நபி(ஸல்) அவர்கள் முதல் வேறு எந்த நபிக்கும், வேறு எந்த மனிதனுக்கும் கொடுக்கப்படாத தனிச் சிறப்புகளை ஈசா நபி (அலை) அவர்கள் பெற்றுள்ளார்கள் என்று குர் ஆனே சான்று பகர்கின்றது"

என்று எழுதி இருந்தார். அதாவது அகில உலகினுக்கும் ஓர் அருட்கொடையாக மனிதருள் மாணிக்கமாகவும், நபிமார்களுள் தலை சிறந்தவர்களாகவும் விளங்கிய அண்ணல் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை விட ஈசா (அலை) உயர்ந்தவர் என்று இவர் குறிப்பிட்டிருந்தார். இவர் கிறிஸ்தவர்களின் கைக்கூலியோ என்று ஐயப்படும் அளவுக்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைத் தாழ்த்தியும் ஈசா (அலை) அவர்களை உயர்த்தியும் எழுதி இருந்த இவரை சாடாமல் போற்றி புகழவா முடியும்?

இஸ்லாத்தின் அடிப்படைக்கே குழிபறிக்கும் இத்தகைய அக்கிரமக்காரர்களை தங்களின் தலைவராக ஏற்று நடக்கும் இஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.